நடிகர் மகன் நடிகர் ஆகக்கூடாதோ.. நெப்போட்டிசம் பற்றி வாயை விட்டு வம்பை வாங்கிய விஜய் சேதுபதி மகன்
சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். அவர் இப்போது ஃபீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ஓரளவு ரெஸ்பான்ஸை பெற்றது. அதேசமயம் சூர்யா ரொம்பவே ஆட்டிட்யூட் காண்பிக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் சூர்யா மீண்டும் வாயை கொடுத்து வம்பில் மாட்டியிருக்கிறார்.
விஜய் சேதுபதி இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பல அவமானங்களை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு தேவை என்றால் எந்த ரோலாக இருந்தாலும் செய்யக்கூடியவர். அப்படி அவர் வில்லனாக பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

மகாராஜா: அதேசமயம் விஜய் சேதுபதி ஹீரோவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அதன்படி தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்தார் அவர். குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. அடுத்ததாக அவர் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்கிவருகிறார்.
மகன் சூர்யா: விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். முதன்முறையாக அவர் நானும் ரௌடிதான் படத்தில் ஒரு சீனில் வந்து சென்றார். பிறகு சிந்துபாத் படத்தில் படம் முழுக்கவே நடித்தார். அதற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்திய அவர், இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் ஃபீனிக்ஸ் படம்தான் அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.
ட்ரோல் சூர்யா: இதற்கிடையே சூர்யா அதிகம் கிண்டல்கள், கேலிகள், விமர்சனங்களையும் சந்தித்தார். படத்தின் பூஜைக்கு விஜய் சேதுபதி ஏன் வரவில்லை என்று அப்போது கேட்டதற்கு, 'நான் வேற அப்பா வேற.. அதனால்தான் சூர்யா சேதுபதினு போடாம சூர்யானு' போட்ருக்காங்க என்றார். அந்தப் பேச்சை பார்த்த பலரும் வயதுக்கு மீறிய பேச்சு என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் டீசர் வெளியீட்டு விழாவுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். அப்போது ஏன் அப்பாவை அழைத்து வந்தீர்கள் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு, தந்தையர் தினத்துக்காக அழைத்து வந்தேன் என்று கூறி சமாளித்தார்.
மீண்டும் ட்ரோல்: இந்நிலையில் மீண்டும் ட்ரோல்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் சூர்யா சேதுபதி. அதாவது சமீபத்தில் பேசிய அவர், 'டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். நடிகரின் மகன் மட்டும் நடிகராகக்கூடாதா' என்று கேள்வி எழுப்பினார். அதனை கவனித்த நெட்டிசன்ஸோ, 'என்ன நெப்போட்டிசத்துக்கு ஏகத்துக்கும் சப்போர்ட் செய்கிறாரே சூர்யா. இப்போதெல்லாம் டாக்டர் மகன் டாக்டர் ஆவதற்குக்கூட ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் நடிகர் மகன் நடிகர் ஆவதுதான் ஈஸி. அதை புரிந்துகொள்ளாமல் இஷ்டத்துக்கு பேசுகிறாரே' என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











