சுறா சீன்.. பணம் கொடுத்தா சுயமரியாதை இழந்து அவன் கூப்பிடுற இடத்துக்கு போவீங்களா.. ட்ரோலாகும் விஜய்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி. ராஜ்குமார் தயாரிப்பில் விஜய், தமன்னா, வடிவேலு நடித்த சுறா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வைத்தே தவெக தலைவர் விஜய்யை திமுகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நாளைய தீர்ப்பு படத்தில் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரால் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராக கரியரின் உச்சத்துக்கே சென்ற விஜய் இதுக்கு மேல நடிக்க வேண்டாம் என்றும் இதுவரை தன்னுடைய ஒவ்வொரு துளி வியர்வைக்கும் பல பவுன் தங்க காசுகளை அள்ளி தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்கிற முடிவுடன் அரசியலுக்கு வந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என பெயரிலேயே வெற்றியை வைத்துக் கொண்டு கட்சியை தொடங்கி ஒவ்வொரு மாவட்ட மக்களையும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் சனிக்கிழமை தோறும் சந்தித்து வந்தார். ஆனால், கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மக்களை சந்திக்கச் சென்ற போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர்.
மகாபலிபுரத்தில் கண்ணீருடன் விஜய் ஆறுதல்: உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்த விஜய் அந்த குடும்பங்களுக்கு அந்த பணத்தையும் கொடுத்தார். இந்நிலையில், கரூருக்கு சென்று அந்த ஊரில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் விஜய் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகாபலிபுரத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை அழைத்து வந்து தவெக தலைவர் விஜய் தற்போது கண்ணீருடன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுறா படத்தில் அப்படி டயலாக்: நடிகர் விஜய் சுறா படத்தில் பேசிய வசனத்தை ஷேர் செய்து விஜய் கரூர் மக்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் தெரிவிப்பதை திமுகவினர் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். "ஒரு 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக நாம பொறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த மண்ணை விட்டுப் போக எப்படி உங்களுக்கு மனசு வந்தது.. எவன் காசு நீட்டினாலும் கை நீட்டுடிவீங்களா, உலகத்துலையே சுயமரியாதை பத்தி அதிகம் பேசுறதும் தமிழன் தான்அதை அடிக்கடி அசிங்கப்படுத்துறதும் தமிழன் தான்" என விஜய் பேசிய வசனத்தை வைத்தே தவெக தலைவர் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர்.
பரிகாசம்: பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் செய்து வரும் நிவாரண உதவியை திமுகவினர் தொடர்ந்து வேண்டுமென்றே கிண்டல் செய்து வருகின்றனர் என்றும் அந்த மக்களையும் இழிவாக சித்தரிப்பது மிகப்பெரிய தவறு என தளபதி விஜய்யின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் செல்வாக்கு கண்டிப்பாக விஜய்க்குத்தான் அதிகம் இருக்கும் என்றும் அனைத்து ஆட்டத்துக்கும் ஒரு முடிவை தளபதி கட்டுவார் எனக் கூறி வருகின்றனர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், விஜய் தைரியமாக கரூருக்கு சென்றே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருக்க வேண்டும். அதுதான் சரியான தலைமைப் பண்பு என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











