சகிப்பின்மையை நான் எதிர்கொண்டதே இல்லை: யுவன் சங்கர் ராஜா பேட்டி
கோயமுத்தூர்: சகிப்பின்மை போன்ற நிலையை நான் உணர்ந்தது கிடையாது என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகனாக இருந்து முஸ்லிமாக சமீபத்தில் மதம் மாறியவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சகிப்புத்தன்மையற்ற நிலை, இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனவே, சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.
நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.
கடந்த ஆண்டு நான் 14 படங்களுக்கு இசையமைத்தேன். எனவே ஓய்வு தேவைப்பட்டதால்தான், இந்த ஆண்டு படங்களை குறைத்துக் கொண்டேன். தற்போது தருமி, தரமணி படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். இதில் தரமணி திரைப்படம் ஐ.டி. இளைஞர்களின் காதலை பற்றியது.
மார்டன் பாடல்கள் மட்டுமல்ல, கர்நாடக இசையில் பாடல்களுக்கு இசையமைக்க தயாராக உள்ளேன். இயக்குனர்கள் கையில்தான் அது உள்ளது. டைரக்டர் செல்வராகவனும், நானும் சேர்ந்து பணியாற்ற இருந்த ‘கான்' படம் நின்று விட்டது. மீண்டும் ஒரு படத்தில் விரைவில் இணைவோம், என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சகிப்பின்மை போன்ற நிகழ்வை நான் எதிர்கொண்டேன் என்று கூறியிருந்த நிலையில், யுவன் தனது அனுபவத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











