வரும் காலங்களில் ஓ.டி.டியிலும்.. திரையரங்கிலும்.. ஒரே நாளில் புது படங்கள் வெளியாவது நிச்சயம் !
சென்னை : முதன்முதலாக தமிழில் திரையரங்கில் வெளியான அன்றே வீடியோ கேசட்டிலும் வெளியான திரைப்படம் 'ஊமை விழிகள்'. மக்கள் வீடியோ கேசட்டையும் பார்த்தார்கள் திரையரங்கிலும் பார்த்தார்கள் என்பது பலரும் கேள்விப்பட்ட வரலாறு . இருந்தாலும் அந்த படத்தின் வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பது தான் அன்றைய காலகட்டத்தின் தகவல் .
இரண்டாவது படமாக 'நாளெல்லாம் பவுர்ணமி' வெளியானது, அந்த படத்தை மக்கள் வீடியோ கேசட்டையும் பார்க்கவில்லை. திரையரங்கிலும் சென்று பார்க்கவில்லை என்று இன்று வரை சொல்லப்படுகிறது . அதற்கு பல காரணங்கள் அடுக்கி கொண்டே போகலாம். இருந்தாலும் நல்ல படைப்புக்களை என்றுமே மக்கள் கை விடுவதில்லை.

இப்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் 'பொன்மகள் வந்தாள்' வெளியாகியுள்ளது. அதே போல் அமிதாப் நடித்த படமும் , பிற மொழி படங்களும் இணையத்தளம் மூலம் வெளியாகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. திரையரங்கங்கள் தமிழக அரசால் மூடி வைக்கப்பட்டுள்ளதால் " பொன்மகள் வந்தாள் " இப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை எனவே ஒப்பு நோக்க இயலாது. இருப்பினும் காலத்தின் கட்டாயம் அறிந்து அதை சரி வர புரிந்து கொண்டு நிறைய புதிய முயற்சிகள் வரும் காலங்களில் நடக்க தான் போகிறது என்பதை உணர வேண்டும் .
வருங்காலத்தில் ஓ.டி.டி தளத்திலும், திரையரங்கிலும் ஒரே நாளில் வெளியாவது நடக்கலாம் , நல்ல திரைப்படங்கள் திரையரங்கிலும் சாதனை படைக்கும். தரமற்ற திரைப்படங்கள் ஓ.டி.டி & திரையரங்கு இரண்டிலுமே புறக்கணிக்கப்படும். இதை ஏற்று கொள்ள மனமும் பக்குவமும் தான் அவசியம்
தரமற்ற திரைப்படங்களை தயாரித்தவர்கள், இயக்கியவர்கள், விநியோகித்தவர்கள், திரையிட்டவர்கள் என சிலர் ஓ.டி.டியால் திரைப்படத் தொழிலே நசித்து விட்டது என்று எப்போதும் போல மூக்கு சிந்துவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் நல்ல படைப்புக்களை ஒரு நாளும் மக்கள் கொண்டாடாமல் இருந்ததில்லை. நல்ல வசூலும் நல்ல பெயரும் எப்படி இருந்தாலும் வந்து சேரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

டெக்னாலஜி வளர வளர சினிமா துறையின் பல புதிய நுணுக்கங்கள் வந்த பொழுது அதை நாம் ஏற்று கொண்டோம் . அதே போல் திரையிடுவதிலும் புதிய யுக்திகள் வரும் பொழுது அதை நாம் ஏற்று கொள்ள தான் வேண்டும். டெலிவிஷன் வந்த பொழுது சினிமாவின் கதை முடிந்து விட்டது என்றார்கள். ஆனால் அது நடக்க வில்லை. அது போல தான் இப்பொழுது ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. கண்டிப்பாக சினிமா ரசிகர்கள் , ரசனை உள்ள அத்தனை ரசிகர்களும் உலகம் முழுவதும் நல்ல கலைக்கு ஆதரவு கொடுத்து கொண்டே தான் இருப்பார்கள். வடிவங்கள் மாறலாம் , ரசிக்கும் விதம் மாறலாம் ஆனால் ரசனை மாறாது.


Click it and Unblock the Notifications











