தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு.. விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் பற்றி புது அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: தியேட்டர் அதிபர்கள் எடுத்துள்ள முடிவை அடுத்து விஜய்யின் மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி புதிய தகவல்கள் வந்துள்ளன.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் சினிமா துறை மொத்தமாக முடங்கியுள்ளது.
சினிமா படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களும் திறக்கப்படவில்லை.

படப்பிடிப்பு அனுமதி
இந்நிலையில் லாக்டவுனில் சில தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. இதனால் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசிடம் கோரிக்கை
அதற்கு முன்னதாக, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆனால், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, தியேட்டர்களை திறக்கவும் தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஜூம் மீட்டிங்
இந்நிலையில் மத்திய அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறது. இதில், தமிழகம் உள்பட அனைத்து மாநில தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதற்கு முன்னதாக தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள், நேற்று ஜூம் காணொலி மூலம் மீட்டிங் நடத்தினர்.

திருப்பூர் சுப்பிரமணியம்
அதில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும் வினியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருப்பதாவது; தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஜூம் மூலமாக நேற்று நடந்துள்ள்து. இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திரைப்பட வர்த்தக சபை
இந்தக் கூட்டத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒருமித்த ஒரு முடிவை எடுத்துள்ளோம். அதாவது, மத்திய அரசு 8 ஆம் தேதி (நாளை) ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்தியாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்தியா முழுவதும் சேர்ந்து ஒருமித்த குரலாக, அக்டோபர் 1 ஆம் தேதி, திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளோம்.

இறுதியான வடிவம்
அதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். மத்திய அரசு அனுமதி கொடுத்தால், மாநில அரசும் அதை நடைமுறைப்படுத்தும். 8 ஆம் தேதி நடக்கும் கூட்டத்துக்குப் பிறகுதான் இறுதியான வடிவம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதன்படி அக்டோபர் 1 ஆம் தேதி தியேட்டர் திறக்கப்பட்டால், அன்று மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர்
விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை தியேட்டரில் வெளியிட இருப்பதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்படும்போது, முதல் படமாக அதைத்தான் திரையிட தியேட்டர் உரிமையாளர்களும் கூறி வந்தனர். அதனால், மாஸ்டர் படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











