அடுத்த பிரம்மாண்ட படைப்பு...ஃபஸ்ட்லுக்குடன் அறிவிப்பு வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ்
சென்னை : தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது தேனாண்டாள் பிலிம்ஸ். பக்திப் படங்கள், விலங்களை வைத்து படம் எடுத்து, அதில் வெற்றியும் கண்டவர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.
இந்நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு தான் விஜய் நடித்த மெர்சல். அட்லீ இயக்கிய இந்த படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

திரும்பி பார்க்க வைத்த மெர்சல்
இந்த படம் ரிலீசான சமயத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் வடிவேலு, சச்சின், காவலன் போன்ற படங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்த படம் மெர்சல். இவர்களின் காம்போவில் உருவான காமெடி பல படங்களில் வெற்றி அடைந்துள்ளது. அது மெர்சல் படத்திற்கும் கை கொடுத்தது.

மற்றொரு பிரம்மாண்ட படைப்பு
தற்போது மற்றொரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று மாலை, அந்நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். முன்னதாக இது பற்றி அவர் நேற்று வெளியிட்ட பதிவில், இந்த படம் இந்தியாவின் முதல் பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

லைவ் ஆக்ஷன் படம்
இதன்படி தேனாண்டாள் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தங்களின் புதிய படத்திற்கு கபி என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது விஷூவல் எஃபெக்ட்ஸ் உடன் லைவ் ஆக்ஷன் காட்சிகளை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

லைக்குகளை அள்ளும் கபி
அத்துடன் ஃபஸ்ட்லுக் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், இது வாலில்லா குரங்கை பற்றிய கதை என்பதை காட்டி உள்ளனர். இந்த குரங்கு அனுபவிக்கும் துயரங்கள், அட்டகாசங்கள் பற்றியது தான் கபி படத்தின் கதை என காட்டப்படுகிறது. இந்த வீடியோ வெளியிடப்பட்ட அரை மணி நேரத்தில் 5000 க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











