வரலாற்றுப் படம்.. ஜெயம் ரவி, சிம்புவைத் தொடர்ந்து.. பிரபல ஹீரோவுக்கு ஜோடியான நிதி அகர்வால்!
ஐதராபாத்: தமிழில், பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்த நிதி அகர்வால், அடுத்து பிரபல ஹீரோ ஜோடியாக நடிக்கிறார்.
இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.
பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.

புரி ஜெகநாத்
அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார். ராம், நபா நடேஷ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இதையடுத்து 'பூமி' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார்.

சிம்புவின் ஈஸ்வரன்
இதில் அவருக்கு சும்மா வந்துபோகும் கேரக்டர்தான். இதையடுத்து சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அவர் ஜோடியாக நடித்தார். இதையடுத்து அவர் இப்போது பிரபல தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க இருக்கிறார். பிங்க்' படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து முடித்துள்ளார் பவன் கல்யாண்.

பவன் கல்யாண்
இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளனர். இதையடுத்து க்ரிஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண். இது அவருக்கு 27 வது படம். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.

உற்சாகத்தில் நிதி
இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது, நிதி அகர்வால் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இதை, தயாரிப்பாளர் ரத்னம் உறுதி செய்துள்ளார். இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாக இருக்கிறது.

மெகா பட்ஜெட்
முதன் முறையாக, டாப் ஹீரோவுடன் நடிக்க இருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறார், நிதி அகர்வால். இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த வரலாற்று படத்துக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











