இரவுக் காட்சி விவகாரம் - திரையரங்க உரிமையாளர்களுக்குள் 'குடுமிப்பிடி'!

கூட்டம் குறைவு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இரவுக்காட்சி ரத்து செய்யப்படுவதாக அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மற்றொரு அமைப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம்.
இதுகுறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோது காலை 10 மணியில் இருந்து இரவு 1 மணிக்குள் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று நமது சங்கம் தமிழக அரசை கோரி வருகிறது.
இதன் மூலம் ஒரே நாளில் ஒரே திரையரங்கில் 2 படங்களை திரையிட்டு ரிலீசாகாமல் தேங்கிக் கிடக்கும் பல சிறிய திரைப்படங்களை வெளியிட்டு, அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எங்களது சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், எங்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட அபிராமி ராமநாதன், தமிழகத்தில் இரவு காட்சிகள் ரத்து என்ற தவறான தகவலை மக்களுக்கு மத்தியில் பரப்பி, ஒரு தேவையில்லாத அச்ச உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்.
திரையரங்குகளில் இரவுக் காட்சிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஐ.டி. செக்டாரில் பணிபுரியும் பல பெண்கள் நள்ளிரவில்கூட நல்ல பாதுகாப்போடுதான் சென்று வருகின்றார்கள் என்று அனைவருக்கும் நன்கு தெரியும்.
தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் வழக்கம் போல் செயல்படும் என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











