Niharika: சிரஞ்சீவி குடும்பத்தில் விவாகரத்து... மூன்றே ஆண்டுகளில் சைதன்யாவை பிரிந்த நடிகை நிஹாரிகா!
ஹைதராபாத்: தெலுங்குத் திரையுலகில் மிகப் பெரிய நட்சத்திர குடும்பம் என்றால் அது சிரஞ்சீவியின் பேமிலி தான்.
சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண் என பல டாப் ஹீரோக்கள் டோலிவுட்டில் மாஸ் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிரஞ்சீவியின் குடும்பத்தில் நடந்துள்ள ஒரு விவாகரத்து டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரஞ்சீவியின் தம்பி மகளான நடிகை நிஹாரிகா தான் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

சைதன்யாவை பிரிந்த நடிகை நிஹாரிகா:தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிஹாரிகா, சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா, தற்போது சட்ட ரீதியாகவே விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார்.
'ஓக்க மனசு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகியிருந்தார். 2016 முதல் 2019ம் ஆண்டு வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நிஹாரிகா, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைதன்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடந்த இவர்களது திருமணத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிஹாரிகாவும் சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவியின் தலைமையில் நடைபெற்ற நிஹாரிகாவின் திருமணம் தற்போது சோக கதையாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகாவுக்கும் அவரது கணவர் சைதன்யாவுக்கும் பிரச்சினை இருந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்து நிஹாரிகா தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், தற்போது இருவருமே சட்ட ரீதியாக பிரிந்துவிட்டார்களாம்.
நிஹாரிகா - சைதன்யா இருவரும் பிரிந்ததை தெலுங்கு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அதேபோல், நிஹாரிகா தரப்பில் இருந்தும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இருவருமே மியூச்சுவலாக பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நிஹாரிகாவின் கணவர் சைதன்யா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அவரது தந்தை காவல்துறையில் உயர் அதிகாரி எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக விவாகரத்து உறுதியானதும், நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாவில் உள்ள திருமண போட்டோக்களை டெலிட் செய்து அதிரடி காட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தெலுங்குத் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











