அந்த கதாபாத்திரத்துக்காக நேரடியாக கோர்ட்டுக்கே போன நிமிஷா சஜயன்.. என்ன விலை படத்துக்காக இப்படியா?
சென்னை: மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படம் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எடுத்த மெனக்கெடல் பற்றிய அவரது பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், நிமிஷா சஜயன் ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கிறார். கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
நேரடியாக கோர்ட்டுக்கு: படம் குறித்து பேசிய நிமிஷா சஜயன், "இதற்கு முன்பும் ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் எப்படி நடக்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். அதன்பிறகுதான் நீதிமன்றத்துக்கே சென்று வழக்கறிஞர்கள் எப்படி வாதிடுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள், நீதிமன்றத்தில் என்ன மாதிரியான சூழல் இருக்கும் என்பதை எல்லாம் நேரில் பார்த்தேன்".

மொத்தமாக மாறிய இமேஜ்: மேலும், "அதற்கு முன்பு வழக்கறிஞர்கள் என்றாலே சினிமாவில் பார்த்த மாதிரியான ஒரு இமேஜ்தான் எனக்குள் இருந்தது. ஆனால் உண்மையான நீதிமன்றத்தில் பார்த்தபோது எல்லாமே மிகவும் இயல்பாக இருந்தது. அந்த அனுபவத்துக்குப் பிறகுதான் நான் வசனங்களை உச்சரிக்கும் விதத்தையும், உடல் மொழியையும் மாற்றிக்கொண்டேன். அந்த ஒரு அனுபவம் இந்த கதாபாத்திரத்திற்கு ரொம்பவே உதவியது" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் இயக்குநர் சஜீவ் பழூருடன் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது பற்றியும் நிமிஷா சஜயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "நான் கதாநாயகியாக அறிமுகமான படத்துக்கு கதை எழுதியவர்தான் சஜீவ் பழூர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்குநராக உருவாக்கிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரது எழுத்து மீது எப்போதுமே எனக்கு தனி மரியாதை உண்டு. இந்த படத்தில் இயக்குநராகவும் அவருடைய பார்வையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

ராமேஸ்வரம் கடற்கரையை பின்னணியாக வைத்து, வாழ்வாதாரம் மற்றும் சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய இந்த கதையில் நிமிஷா சஜயனுக்கு மீண்டும் ஒரு வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications