கொரோனா லாக்டவுனால் துபாய் திட்டம் டமார்.. பண்ணை வீட்டில் பிரபல ஹீரோ திருமணம்.. முடிவானது தேதி!
ஐதராபாத்: கொரோனாவால் துபாயில் நடக்க இருந்த திருமணத்தை கேன்சல் செய்த ஹீரோ, இந்த மாதம் எளிமையாக நடத்த இருக்கிறார்.
பிரபல தெலுங்கு ஹீரோ நிதின். தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான சுதாகர் ரெட்டியின் மகன். இவர், ஜெயம் படம் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதில்தான் கோபிசந்த் வில்லனாக அறிமுகமானார். இந்தப் படம் தமிழில் ரவி நடிப்பில் ஜெயம் என்ற பெயரிலேயே ரீமேக் ஆகி, சூப்பர் ஹிட்டானது.

ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள நிதின், ராம்கோபால் வர்மா இயக்கிய அக்யுத் படம் மூலம் இந்திக்கும் சென்றார். இப்போது வெங்கு குடுமுலா இயக்கிய பீஷ்மா என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். அடுத்து ரங்க் தே உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்
சில படங்களை தயாரித்தும் உள்ள நிதின், சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். இவர் ஷாலினி என்பவரை சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி, ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.

துபாயில் திருமணம்
இவர்கள் திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நிதின் மாஸ்க் அணிந்து கொண்டு திருமணம் செய்துகொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்பதால் திருமணத்தை தள்ளி வைத்ததாக நிதின் தெரிவித்திருந்தார்.

உயிர் முக்கியம்
'ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் முக்கியமான நிகழ்ச்சி. அதைவிட முக்கியம் உயிர். அதனால் திருமணத்தைத் தள்ளி வைத்தோம்' என்று தெரிவித்திருந்தார் நிதின். இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்டிருந்த இவர்கள் திருமணம் இந்த மாதம் 26 ஆம் தேதி நடக்க இருக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் தீவிரமாகிக் கொண்டே இருப்பதால், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று தேதியை முடிவு செய்துள்ளனர்.

எளிமையாக நடத்த
ஐதராபாத் அருகில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் இவர்கள் திருமணம் எளிமையாக நடக்க இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். 'முதலில் துபாயில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தது உண்மைதான். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதனால் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார் நிதினின் அப்பா சுதாகர் ரெட்டி.


Click it and Unblock the Notifications











