துபாயில் 50 கோடி ரூபாய் வீடு.. அரசியல்வாதி வாங்கி தந்ததாக சொல்வது பொய்.. நிவேதா பெத்துராஜ் ஆவேசம்!!
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் பிரபல அரசியல் வாரிசு இருவரையும் இணைத்து வைத்து பத்திரிகையாளர் ஒருவர் படுமோசமாக பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், திரிஷாவுக்கு பொங்கியவர்கள் நிவேதா பெத்துராஜுக்கு ஏன் பொங்கவில்லை என ரசிகர்களே அந்த பத்திரிகையாளருக்கு எதிராக களத்தில் குதித்தனர்.
திரிஷா தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு வாய் திறந்து போல்டாக பேசினார். ஆனால், நிவேதா பெத்துராஜ் இந்த விஷயத்தில் பல மாதங்களாக வாய் திறக்காமல் மெளனமாக இருக்கிறாரே என நெட்டிசன்கள் அந்த பத்திரிகையாளர் சொல்வது தான் சரி என்றே பதிவிட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், இதற்கு மேலும், பொறுமையாக இருக்க முடியாது என நடிகை நிவேதா பெத்துராஜ் நீண்ட விளக்கத்தை கொடுத்து தன் மீது வீண் பழி சுமத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் வாரிசுடன் தொடர்பு: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பிரபல அரசியல் தலைவரின் வாரிசுடன் நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்பில் இருக்கிறார் என்றும் இருவரும் ஒன்றாக நடித்ததில் இருந்தே நட்பு ஏற்பட்டு காதலாக மாறிவிட்டதாகவும் நடிகைக்கு பல கோடி ரூபாய் பரிசுகளை அந்த அரசியல் வாரிசு வழங்கி உள்ளார் என பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார்.
துபாயில் சொகுசு பங்களா: பல கோடி ரூபாய்க்கு துபாயில் சொகுசு பங்களாவை நிவேதா பெத்துராஜுக்கு அந்த அரசியல் பிரபலம் வாங்கிக் கொடுத்தார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. மேலும், அந்த நடிகைக்காக கார் பந்தயத்தையே சென்னையில் நடத்தப் போகிறார் என்றெல்லாம் பேசத் தொடங்கி விட்டனர்.
நிவேதா பெத்துராஜ் மறுப்பு: இந்நிலையில், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் உலாவும் அத்தனையும் பொய்யான செய்தி என்றும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அவரது குடும்பத்தினரின் நிம்மதியையும் ஒரு சிலர் தங்கள் தேவைக்காக தப்பு தப்பாக பேசி இப்படி அழிக்கலாமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், 20 ஆண்டுகளாக துபாயில் தான் உள்ளேன் என்றும் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால், ஒருபோதும் எந்த நடிகரின் தயவையோ, இயக்குநரின் தயவையோ நாடி செல்லவில்லை. என்னை தேடி வந்த படங்களில் மட்டுமே நடித்துள்ளேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மேலும், எனக்காக நடத்தப்படப் போவதாக சொல்லப்படும் கார் பந்தயம் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது என்றும் கார் ரேஸ் பிரியை நான் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை: தன்னை பற்றி தவறான கருத்துக்களை அடுக்கிய பத்திரிகையாளர் மீது எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மனிதம் மற்றும் உண்மை இன்னமும் பத்திரிகை துறையில் நிறைந்திருக்கிறது என நம்புகிறேன். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை போலத்தான் நானும் கண்ணியமானவள் தான். என் மீது தேவையில்லாத பழி மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை வாய் கூசாமல் அடுக்க வேண்டாம் என நடிகை நிவேதா பெத்துராஜ் தனது நீண்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். நிவேதா பெத்துராஜின் போல்ட் ஸ்டேட்மென்ட் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











