Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கலைஞனுக்கு ஒருபோதும் வயது கிடையாது! - பாரதிராஜா
கலைஞனுக்கு ஒருபோதும் வயது கிடையாது என்று தெரிவித்தார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் கடைசிப் படமாக 1960-களில் வெளிவந்த "சிவகாமி' படத்தை இயக்கியவர் ஆண்டனி மித்ரதாஸ். தற்போது 101 வயதைக் கடந்துள்ள மித்ரதாசைக் கவுரவிக்கும் விதத்தில் அவருடைய பிறந்த நாள் விழா தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், இயக்குநர் மித்ரதாஸ் அவரது மனைவி எலிசபெத் (93) மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்மணி, இயக்குநர் பாரதிராஜா, லிங்குசாமி, நடிகர் சங்க செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் இயக்குநர் மித்ரதாஸிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.
பாரதிராஜா
விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "சினிமா ஒரு கனவுப் பிரதேசம். இந்த பூமியே ஒரு கனவு. கனவு பூமிக்குள் பிறந்து நாமெல்லாம் கனவுப் பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கிறோம். இந்தப் பயணம் ஒரு நதி வழியில் போவது மாதிரி. எங்கோ ஓரிடத்தில் ஊற்றாக உருவாகி, ஓடையாக உருவம் பெற்று பள்ளம், மேடு பார்த்து நீர்வீழ்ச்சியாக விழுவதுதான் இந்தப் பயணத்தின் இலக்கு. அது மாதிரிதான் சினிமா இயக்குநர்களின் பயணமும்.
நதி வழிப் பயணம்
"16 வயதினிலே', "முதல் மரியாதை' போன்றவை அந்தப் பயணங்களில் எனக்கு வந்து சேர்ந்தவை. இதில் நான்தான் என்பதில் ஒன்றும் இல்லை. அந்த நதி வழிப் பயணத்தில் வந்து சேர்ந்திருக்கிறார் இயக்குநர் மித்ரதாஸ்.
வயது கிடையாது
கலைஞனுக்கு வயது என்பது ஒருபோதும் கிடையாது. கலைஞனுக்கு 60 வயது என்பதே அதிசயம். 80 வயது என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. 100 வயது என்பது கடவுளின் சின்னம். குழந்தையைக் கடவுள் என்போம். அது போல் 100 வயது கடந்தவனும் கடவுள். மித்ரதாஸ், அந்த நிலையைத்தான் இப்போது அடைந்திருக்கிறார்.
பாதங்களைத் தொட்டு
தேனி லட்சுமி தியேட்டருக்கு அழைத்துச் சென்று என் அம்மா மித்ரதாஸின் படங்களைக் காட்டியிருக்கிறார். சினிமா என்னும் அற்புதமான கனவுப் பிரதேசத்தில் பல கனவுகளைக் கடந்து வந்த மனிதனாக இன்று மித்ரதாஸ் இருக்கிறார். இந்தக் கனவு அவருக்கு நிரந்தரமாக வேண்டும். கனவு காண்கிறவனுக்கு என்றைக்குமே வயது கிடையாது. இத்தனை ஆண்டு காலத்தில் எத்தனை எத்தனை பயணங்களைக் கடந்து வந்திருக்கும் மித்ரதாஸின் பாதங்கள்! அந்த "பவர்' இப்போது இந்த இடத்தில் இருக்கும். அதனால் அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
ஸ்ரீதருக்கும்...
இந்த விழாவைப் பார்க்கும்போது, என் முன்னோடியான இயக்குநர் ஸ்ரீதருக்கு இது போன்ற ஒரு விழாவை எடுக்காமல் போய்விட்டோமே என்ற வருத்தம் ஏற்படுகிறது, என்றார் பாரதிராஜா.
ஆன்டனி மித்ரதாஸ்...
மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது ஆண்டனி மித்ரதாஸின் குடும்பம். மித்ரதாஸின் தந்தை முதல் உலகப் போரில் பங்கெடுத்தவர். அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்துள்ளார் மித்ரதாஸ். பின்னர், திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்ட மித்ரதாஸ், தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கலைஞர்களான எல்லீஸ் ஆர். டங்கன், சி.ஆர்.ரகுநாத் தொடங்கி பலரிடமும் சினிமா கற்றுள்ளார்.
முதல் படம்
பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் இணைந்து நடித்து 1941-ஆம் ஆண்டு வெளிவந்த "தயாளன்' - மித்ரதாஸ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். 1960-ஆம் ஆண்டு தியாகராஜ பாகவதரின் கடைசிப் படமாக வெளிவந்த "சிவகாமி' படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.
கத்தி வரைக்கும்...
இவற்றைத் தவிர மலையாளத்தில் பிரேம் நசீர் நடிப்பில் மூன்று படங்களையும், ஒரு சிங்களப் படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா மீது இப்போதும் அதீத ஆர்வம் கொண்டுள்ள மித்ரதாஸ், அண்மையில் வெளிவந்த "கத்தி' திரைப்படம் வரை பார்த்துள்ளார்.