எனக்கு கூட்டணி கிடையாது.. எப்போதும் தனி ஆள்தான்! - இளையராஜா
கரூர்: எனக்கு கூட்டணியே கிடையாது. எப்போதும் தனி ஆள்தான், என்று இசைஞானி இளையராஜா கூறினார்.
திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக, "இராஜராஜ சோழனின் போர்வாள்' என்ற திரைப்படத்துக்கான பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

கருவூரார் சந்நிதியில்...
அறிமுக இயக்குநர் ஆர்.எஸ். அமுதேசுவர் இயக்கத்தில்,கவிஞர் சினேகன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்துக்கான பூஜை, கரூர் கல்யாண பசுபதீசுவரர்கோவில் அருகிலுள்ள கருவூரார் சந்நிதி அருகே புதன்கிழமை நடைபெற்றது.

ஊசிமணி பாசிமணி...
பட பூஜையைத் தொடக்கி வைத்து, "ஊசிமணி பாசிமணி என் உள்ளத்திலே பாசமணி' எனத் தொடங்கும் பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இளையராஜா. அதை பொதுமக்கள் மிகுந்த பரவசத்தோடு கேட்டனர்.

புதிய அனுபவம்
இந்த அனுபவம் குறித்து இளையராஜா கூறுகையில், " ஒரு திரைப்படத்துக்கான பாடலுக்கு இசையமைக்கும் பணியை பொதுமக்கள் முன்னிலையில் செய்வது எனக்கும் புதுமையாகத்தான் இருக்கிறது. கச்சேரி செய்வது வேறு. இது வேறு.

யாருடனும் கூட்டணி இல்லை
சிலர் இந்த இயக்குநர், இசையமைப்பாளர் இருக்கும் கூட்டணி வெற்றி பெறும், அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்பார்கள். எனக்கு கூட்டணி கிடையாது; எப்போதும் தனி ஆள்தான், எதற்கும் கவலைப்பட்டதும் இல்லை," என்றார் இளையராஜா.

சினேகன்
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான கவிஞர் சினேகன் பேசுகையில், "இந்தப் படத்துக்கான பூஜையை கரூரில் தொடங்கக் காரணம், ராஜராஜசோழனின் குரு கருவூரார். அவருடைய சன்னதி அமைந்துள்ள பகுதியில் பட பூஜையைத் தொடங்குவது என்பது பொருத்தமே," சினேகன்.

தஞ்சை - திருச்சியில்...
திரைப்பட இயக்குநர் அமுதேசுவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும். பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதால் இந்தப் படத்தை எப்போது திரையிடுவது என்பது குறித்து முடிவு செய்யவில்லை. படத்தில் நடிகை சினேகா, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோரும் இதில் நடிக்க உள்ளனர்," என்றார்.


Click it and Unblock the Notifications











