முதல் முறையாக... கொண்டாட்டங்கள் இல்லாத ரஜினியின் 65 வது பிறந்த நாள்!
இன்று ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள். முதல் முறையாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அமைதியாக, மக்களுக்கு உதவி செய்தபடி இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
பொதுவாக ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள். டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடக்கும்.
சென்னையிலும், பிற ஊர்களில் மைக் செட் வைத்து ரஜினி பாடல்களை ஒளிபரப்பி, இலவச உணவு, உடை, எழுதுபொருட்கள் வழங்குவார்கள் ரசிகர்கள்.
ஆட்டோ ஸ்டாண்டுகளில் 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஒலித்தபடி இருக்கும்.

ரத்து
இந்த ஆண்டு அனைத்தையும் ரத்து செய்யச் சொல்லிவிட்டார் ரஜினி. காரணம் சமீபத்தில் பெய்த பெருமழையும், அதன் வெள்ள பாதிப்பும்தான். ஊரே சோகத்தில் தத்தளிக்க, தனது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடுவது தவறாகப் போய்விடும். எனவே பேனர் அடிப்பது, போஸ்டர் ஒட்டுவது போன்றவற்றைக் கூட தவிர்த்து விடுங்கள் என அறிவுறுத்தியிருந்தார்.

கோவாவில்
கடந்த சில ஆண்டுகளாக பிறந்த நாளன்று வீட்டு முன் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் ரஜினி. கடந்த முறை புத்தாண்டு அன்று கூட ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால் இந்த முறை ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு, கோவாவில் கபாலி ஷூட்டிங்கில் உள்ளார்.

லதா ரஜினி
ரஜினி வீட்டில் இல்லாவிட்டாலும், அங்கு வந்த ரசிகர்கள் பலர் லதா ரஜினியைச் சந்தித்து ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

நிவாரணம்
ரஜினியின் வேண்டுகோளுக்கிணங்கி ரசிகர்கள் கடந்த வாரத்திலிருந்தே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்திலிருந்து ஏராளமான நிவாரணப் பொருள்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அவற்றையும் ரசிகர்கள் விநியோகித்து வருகின்றனர்.

முதல் முறை
ரஜினி சூப்பர் ஸ்டாரான பிறகு அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவது இதுதான் முதல்முறை.


Click it and Unblock the Notifications











