கோச்சடையானுக்கு சிக்கல் என்பது தவறான செய்தி.. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்ற படம் அது! - விநியோகஸ்தர்கள்
சென்னை: கோச்சடையான் படத்துக்கு சிக்கல் என்று வரும் செய்திகள் உண்மையில்லை. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்று, ரிலீசுக்கு தயாராகவே உள்ளது அந்தப் படம். திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோச்சடையானுக்கு விநியோகஸ்தர்களால் சிக்கல், தயாரிப்பாளருக்கு பிரச்சினை, வியாபாரம் ஆவதில் தாமதம் என்றெல்லாம் கடந்த நான்கு தினங்களாக செய்திகள் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன.

ஆனால் அவற்றில் உண்மையில்லை என்று விநியோகஸ்தர்கள் சங்கம் மறுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலர் ஜெயக்குமார் கூறுகையில், "பொதுவாக கோச்சடையான் மாதிரி பெரிய படங்கள் வெளியாகும்போது, வருமானப் பகிர்வு, டிக்கெட் விலை, தியேட்டர் ஒதுக்குதல் போன்ற விஷயங்களைப் பற்றி நிறைய கலந்துரையாடல்கள் நடப்பது வழக்கம்.
கோச்சடையான் பட விஷயத்திலும் அதுதான் நடந்தது. இந்த மாதிரி பெரிய படம், அதுவும் ரஜினி படம்தான் தியேட்டர்களில் பெரிய கூட்டத்தை ஈர்க்கும். அந்த வாய்ப்பை யார் தவறவிடுவார்கள்.
கோச்சடையானுக்கு ஏற்கெனவே கேளிக்கை வரிச் சலுகையை தமிழக அரசு வழங்கிவிட்டது. படம் வெளியாகத் தேவையான அனைத்து விஷயங்களையும் பேசி முடித்துவிட்டோம். திட்டமிட்டபடி, மே 9-ம் தேதி கோச்சடையான் வெளியாகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











