போதைப்பொருள் விவகாரம்.. துப்பாக்கி முனையில மிரட்டி யாரும் வாயில கொண்டாந்து ஊத்தலை.. நடிகை சாடல்!
மும்பை: போதைப் பொருளை பயன்படுத்துமாறு துப்பாக்கியை தலையில் வைத்து யாரும் கட்டாயப்படுத்துவதில்லை என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட் பரபரப்பாகி இருக்கிறது. முதலில் நெபோடிசம் பற்றிய பேச்சுகள் எழுந்தன.
சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகர்களால் திறமையான நடிகர்களின் வாய்ப்பு பறிபோவதாகக் கூறினர்.

ரியா சக்கரவர்த்தி
இதுபற்றிய விவாதங்கள் பாலிவுட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில வாரிசு நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர். இந்நிலையில் இப்போது பாலிவுட்டில் போதைப் பொருள் பழக்கம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையின்போது, நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸப் உரையாடல்கள் வெளியே வந்தன.

ரியாவின் சகோதரர்
அவருக்குப் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார், நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சுஷாந்த் சிங்கின் மானேஜர் சாமுவேல் மிரண்டா உள்பட சிலரை கைது செய்தனர். நடிகை ரியாவிடமும் இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஷாமா சிக்கந்தர்
இதையடுத்து பாலிவுட்டில் போதைப் பொருள் இல்லாமல் பார்ட்டிகளே இல்லை என்று நடிகை கங்கனா கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடிகை ஷாமா சிக்கந்தர், துப்பாக்கியை வைத்து மிரட்டி, போதைப் பொருளை ஏற்கும்படி யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

எதிர்மறை எண்ணம்
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மும்பை திரையுலகம் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் என்ன சொல்கிறோம் என்பதைப் புரியாமலேயே சிலர் பேசி வருகிறார்கள். சிலர் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பேசி வருகிறார்கள். இது மக்கள் மனதில் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும்.

மோசமான இடம் அல்ல
பாலிவுட்டுக்கு வர நினைக்கும் இளம் திறமையாளர்களின் ஆர்வத்தை இது குறைத்துவிடும். இந்த இன்டஸ்ட்ரிதான் வேலை வாய்ப்பை கொடுத்தது, பல கலைஞர்களை கொடுத்தது, மக்களை மகிழ்வித்தது. இது மோசமான இடம் அல்ல. மொத்த சினிமா துறையும் போதைப் பொருள் புழக்கத்தில் இருக்கிறது என்பதை ஏற்க முடியாது.

எதையும் ஊற்றவில்லை
போதைப் பொருள் புழங்கப்பட்ட சில பார்ட்டிகளுக்கும் அது இல்லாத பார்ட்டிகளுக்கும் நான் சென்றிருக்கிறேன். நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்களிடம்தான் இருக்கிறது. துப்பாக்கியை உங்கள் தலையில் வைத்து கட்டாயப்படுத்தி, யாரும் வாயில் கொண்டு வந்து எதையும் ஊற்றவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











