அடக்கடவுளே.. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்னு சொன்னாங்களே.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவலையா?
சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு.
இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது.

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியில் நடித்து கலக்கியவர். மேலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் இவர் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
ஹார்ட் பேஷன்ட் ஆனாலும்: வாட்டர் பாட்டில் கூட தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு, நான் ஒரு ஹார்ட் பேஷன்ட்.. ஆனாலும், 5 கிலோ அரிசி, 10 கிலோ அரிசி மூட்டையை மாடியிலிருந்து தூக்கிட்டு வந்து கொடுக்கிறேன். நம்மாள முடிந்த உதவியை மத்தவங்களுக்கு பண்ணனும், என கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்து வந்த சேஷு இலவசமாக பல பேருக்கு திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார்.
10 லட்சம் இருந்தா: காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும் 10 லட்சம் வரை பணம் செலவாகும் என சொல்லப்பட்டது. மேலும், சேஷுவை காப்பாற்ற பணம் கொடுங்க என்றும் சினிமா துறையினரிடம் அவரது உறவினர்கள் கெஞ்சிக் கேட்டனர்.
பெரிதாக யாருமே உதவல: ஒரு சிலர் சேஷுவிற்கு உதவி செய்ய ஜீபேயில் பணம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், பெரிதாக யாருமே உதவி செய்யாத நிலையில், சேஷுவிற்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுத்தான் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எத்தனை கோடி செலவானாலும் காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், நலிந்த கலைஞர்களுக்கு உதவி பண்ண பெரிய நடிகர்கள் மற்றும் உடன் பல ஆண்டுகள் நடித்து வந்த நடிகர்களும் உதவி செய்ய முன் வருவதில்லை என்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது. நடிகர் சந்தானம், வடிவேலு, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர் சேஷு என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இறுதிச்சடங்கு: பள்ளிக்கரணையில் உள்ள சாய் பாபா நகரில் உள்ள 3வது மெயின் ரோடு, 3வது குறுக்குச் சந்தில் உள்ள சேஷுவின் வீட்டில் அவரது உடல் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











