ஆச்சரியமா இருக்கே.. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹீரோயின்களை சந்தித்தது யார், யார்? அதிகாரிகள் தகவல்!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகளை யார், யார் சந்தித்தார்கள் என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
பெங்களூரில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், கன்னட சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சம்மந்தபட்டு இருந்தது தெரியவந்தது.

ராகிணி திவேதி கைது
தொடர்ந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

பரப்பனஅக்ரஹாரா
இந்த வழக்கில் பின்னர் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவர்கள் சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளதை அடுத்து, அமலாக்கத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

சந்தித்தவர்கள் விவரம்
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோரை சந்தித்தவர்கள் பற்றிய விவரத்தை, சமூக சேவகர் நரசிம்மமூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சிறை நிர்வாகம், சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை அவர்களை யாரும் சந்திக்கவில்லை என்று பதில் அளித்துள்ளது.

முன்னெச்சரிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர்கள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர்களை யாரும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதுபற்றி நரசிம்மமூர்த்தி கூறும்போது, தான் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த கேள்வியை எழுப்பியதாகவும் அக்டோபர் 12 ஆம் தேதி பதில் அனுப்பியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஆச்சரியமாக இருக்கிறது
இதற்கிடையே, சிறை நாட்குறிப்புகளில் இருந்து சான்றுகளை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது ஆச்சரியமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். போதைப் பொருள் வழக்கில், நடிகை ராகிணி திவேதி, செப்டம்பர் 4 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். செப்டம்பர் 8 ஆம் தேதி, நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











