கரண்ட் இல்லைனா கம்முன்னு இருங்க.. எதுக்கு விஜய்யை கேள்வி கேக்குறீங்க? பகீர் கிளப்பிய மகேந்திரன்
சென்னை: தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி இருந்தாலும், மாஸ்டர் மகேந்திரன் போல ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தவர்கள் சிலரே. சினிமாவைத் தாண்டி எப்போதும் அரசியல் விவகாரங்களிலும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து வரும் அவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
"தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்கு, என் வீட்டுலயும் தான் மின்வெட்டு இருக்கு. அதுக்காக நம்ம முதலமைச்சர் விஜயைக் கேள்வி எழுப்புனா உங்க வீட்டுக்குக் கரண்ட் வந்துருமா? இப்போ முதலமைச்சரை நோக்கி மைக்க நீட்டி 'என்னங்க தமிழ்நாட்டுல ஒரே மின்வெட்டா இருக்கு?' அப்படின்னு கேள்வி கேட்டா உடனே கரண்ட் வந்துருமா?" என்று பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகேந்திரனின் இந்த கருத்து வெளியான சில நிமிடங்களிலேயே, அதற்கு முத்திர குத்தி வண்டி வண்டியாக விமர்சனங்களை அள்ளிக் கொண்டு வந்து சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். ஜனநாயக நாட்டில் மக்கள் சந்திக்கும் ஒரு அடிப்படைப் பிரச்சனை குறித்து அரசிடமும், அதன் தலைவரான முதலமைச்சரிடமும் கேள்வி கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது என்று பலரும் காட்டமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேட்டுக்குடித்தனமான அணுகுமுறை: ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் மின்சாரமில்லாமல் தவிக்கும் போது, "கேள்வி கேட்டா கரண்ட் வந்துருமா?" எனப் பேசுவது பொறுப்பற்ற மற்றும் மேட்டுக்குடித்தனமான (Elite) அணுகுமுறை என்று பலரும் சாடி வருகின்றனர்.
விஜய் ரசிகர்களைக் கவர திட்டமா?: மாஸ்டர் மகேந்திரன் ஆரம்பத்திலிருந்தே ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவில் விஜய் ரசிகர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவர்களின் கைதட்டல்களைப் பெறவுமே அவர் நியாயமே இல்லாத இத்தகைய வாதத்தை முன்வைக்கிறார் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கேள்வி கேட்பதே ஜனநாயகம்: "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்புவதுதான் ஜனநாயகம். அதை விடுத்து கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" எனப் பல அரசியல் விமர்சகர்களும் சமூக ஆர்வலர்களும் மகேந்திரனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, மாஸ்டர் மகேந்திரன் பேசிய இந்த 'மின்வெட்டு' வாதம் தற்போது அவருக்கு எதிராவே திரும்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதால், இந்த விவகாரம் தற்போது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications