கமல் ஹாசனை நம்பி படம் எடுக்க தயாரிப்பாளர் யாரும் இல்லை.. சொல்வது ஜே கே ரித்தீஷ்!
சென்னை: நடிகர் கமல் ஹாசனை நம்பி படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்று நடிகரும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்தீஷ் கூறியுள்ளார்.
தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கடுமையாக விமர்சித்து வரும் கமல் ஹாசன் முதலில் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து ஜேகே ரித்தீஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது தன்னிச்சையாக தொலைக்காட்சி உரிமையை கொடுத்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதில் கமல் ஹாசனுக்கும் பங்கு இருக்கிறது.
கமல் சின்ன வயதிலிருந்தே நடித்துக் கொண்டிருக்கலாம். வெவ்வேறு வேடங்களும் நடித்திருக்கலாம். ஆனால் அவரை நம்பி படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. ஒரு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் அளவுக்கு அவருடைய படங்கள் ஓடுவது இல்லை. ரஜினி, விஜய், அஜீத், சிவகார்த்தியேன் போன்றவர்களை தயாரிப்பாளர்கள் தேடி ஓடுகிறார்கள். கமலைத் தேடி எந்த தயாரிப்பாளரும் செல்வதில்லை.
எந்த அமைச்சரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். தன்னிடம் ஆதாரம் இருந்தால் தாராளமாக முதல்வரை சந்தித்து கமல் கொடுக்கலாம். அதை விடுத்து ட்விட்டரில் கொடு, வாட்ஸ் அப்பில் கொடு என்று மக்களைத் தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை," என்றார்.
நடிகர் வராகி கூறுகையில், "நடிகர் சங்கத்தில் 20 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதில் கார்த்தி, விஷால், நாசர் மற்றும் கமலுக்கும் பங்கு உண்டு. அது குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளேன். முதலில் அதற்கு கமல் பதில் கூறட்டும். பின்னர் ஊழல் பற்றி அவர் பேசலாம்.
கமல் ஹாசன் எந்த ஆதாரமும் கொடுக்காமல் அமைச்சர்கள் பற்றி ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். நீட் தேர்வு குறித்து மத்திய அரசை அல்லவா அவர் கேட்க வேண்டும். மத்திய அரசு ஆளும் மாநிலங்களின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி அவர் வாய் திறக்கவில்லையே..", என்றார்.


Click it and Unblock the Notifications











