ஏகே 62வில் இருந்து அதிரடியாக அவரையும் தூக்கிட்டாங்களா.. அஜித் படத்தோட அப்டேட் எப்போ தான் வருமோ?
சென்னை: துணிவு திரைப்படம் வெளியாகி 40 நாட்கள் ஆகியும் இன்னமும் அஜித்தின் ஏகே 62 படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்களே கடுப்பாகி சமீப காலமாக ஆன்லைனில் எந்தவொரு ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்யாமல் அமைதியாகி உள்ளனர்.
மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், மேலும் ஒரு அதிரடி மாற்றம் ஏகே 62வில் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் விலகல்
லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் காலதாமதம் செய்தார் என்றும் விக்னேஷ் சிவனின் கதை மீது அஜித்துக்கும் லைகாவுக்கும் நம்பிக்கை ஏற்படாத நிலையில், அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அஜித்தின் படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளே கிடைக்கல
நடிகர் அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தனை வைத்து ஏகே 62 படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், சல்மான் கானின் உறவினர் படத்தை இயக்குவதில் விஷ்ணுவர்தன் பிசியாக உள்ள நிலையில், ஏகே 62 படத்தை அவர் இயக்கவில்லை எனக் கூறிவிட்டாராம். அட்லீயை அணுகிய நிலையில், ஜவான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்பதால் இப்போதைக்கு வேண்டாம், ஏகே 63 வேண்டுமானால் பார்க்கலாம் எனக் கூறியதாகவும் அதனால், கடைசியில் வேறு ஆப்ஷனே இல்லாமல் மகிழ் திருமேனியை புக் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இல்லை
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஏகே 62 படத்துக்கு மகிழ் திருமேனி சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக கொண்டு வர முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சந்தோஷ் நாராயணன் அஜித் படத்திற்கு இசையமைக்கப் போவதில்லை என பரபரப்பு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மீண்டும் அனிருத்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விக்னேஷ் சிவன் வெளியேறிய நிலையில், அனிருத்தும் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இல்லை என்றும் அனிருத் தான் இசையமைக்கப் போவதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்லா கட்டும் கச்சேரி
அனிருத் இசையமைக்கும் படங்கள், பாடும் பாடல்கள் எல்லாமே ஹிட் அடித்து வரும் நிலையில், தனியாக ராக் ஸ்டார் என கச்சேரிகளையும் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறார் அனிருத். எல்லா கச்சேரிகளுக்கும் ஏகப்பட்ட இளைஞர்கள் கூட்டம் பல ஆயிரம் ரூபாய்களை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போ வரும்
ஏகே 62 படத்தை இவர் இயக்கப் போகிறார், அவர் இசையமைக்கப் போகிறார் என வெறும் தகவல்கள் மட்டுமே வெளியாகி வரும் நிலையில், படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போ வரும் என அஜித் ரசிகர்கள் கன்னத்தில் கை வைத்து காத்திருக்கின்றனர். மார்ச் மாத ஆரம்பத்தில் தான் அதிகாரப்பூர்வ அப்டேட் வரும் என கூறப்படுகிறது. காத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











