பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை!
பெங்களூர்: காவிரி பிரச்சினை வந்தாலே போதும்... கர்நாடகத்தில் 'முதல் பலிகடா' தமிழ் சினிமாக்கள்தான்.
சத்தமில்லாமல் எல்லா தமிழ்ப் படங்களையும் தியேட்டர்களைவிட்டு தூக்கிவிடுவார்கள். புதுப்படங்களுக்கு தியேட்டரும் தர மாட்டார்கள்.
இந்த முறையும் காவிரி கலாட்டா ஆரம்பித்ததுமே, அத்தனை தமிழ்ப் படங்களையும் தியேட்டர்களிலிருந்து எடுத்துவிட்டார்கள் கர்நாடகத்தில். இத்தனைக்கும் இவைதான் அதிக வசூலைக் கொடுத்து வந்தவை. குறிப்பாக ஒற்றைத் திரை அரங்குகளில் தமிழ்ப் படங்கள்தான் அதிக ரசிகர்களை ஈர்த்து வந்தன.
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் சூர்யாவின் மாற்றானுக்கு, பெங்களூரில் ஒரு தியேட்டர் கூட தரப்படவில்லை. படத்தின் கர்நாடக விநியோக உரிமையை வாங்கிய விநியோகஸ்தரும் கூட படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
மைசூர், மாண்டியா உள்பட தமிழர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக பகுதிகளில் எங்குமே இந்தப் படம் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications












