15 நாட்கள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி ரத்து.. அரசு அதிரடி.. மீண்டும் கவலையில் பாலிவுட் சினிமா!
மும்பை: இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டை விட அதிகமாகவே அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மகாராஷ்ட்ரா அரசு நாளை (ஏப்ரல் 15) முதல் அடுத்த 15 நாட்களுக்கு முழு லாக்டவுன் போட்டுள்ளது.
சினிமா, டிவி, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு படப்பிடிப்புகளும் நடத்தக் கூடாது என்கிற அதிரடி அறிவிப்பையும் மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது மீண்டும் சினிமா துறைக்கு பேரிடியாக மாறி உள்ளது.

மீண்டும் கொரோனா
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கொரோனா எனும் கொடிய வைரஸ் ஆட்டிப் படைத்தது. ஏகப்பட்ட மக்களின் உயிர்களை காவு வாங்கிய இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலகம் முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக கொரோனா வேகம் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உலகையே மிரட்டி வருகிறது கொரோனா.

தடுப்பூசி தட்டுப்பாடு
கொரொனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், நாடு முழுவதும் மக்களுக்கு அதை விரைவில் செலுத்த முடியாமல் அரசு தடுமாறி வருவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. மேலும், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடும் உள்ளதாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மகராஷ்ட்ராவில் லாக்டவுன்
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்கி உள்ள நிலையில், லாக்டவுன் எல்லாம் போட மாட்டோம் என சொல்லி வந்த மாநில அரசுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மினி லாக்டவுன்களை போட்டு வருகின்றன. மகாராஷ்ட்ராவில் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு முழு லாக்டவுனையே போட்டு அதிரடி காட்டி உள்ளனர்.

படப்பிடிப்புகள் ரத்து
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற அறிவிப்பு வந்துள்ள நிலையில், மகாராஷ்ட்ராவில் ஒரு படி மேல் சென்று, டிவி, சினிமா மற்றும் விளம்பரங்கள் என அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும் அடுத்த 15 நாட்களுக்கு தடை விதித்துள்ளது அம்மாநில அரசு.

பாலிவுட்டுக்கு பெரிய பாதிப்பு
ஏற்கனவே பாலிவுட்டில் ஆமிர்கான், அக்ஷய் குமார், கத்ரீனா கைஃப், ஆலியா பட், ரன்பீர் கபூர், கோவிந்தா என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஷாருக்கானின் பதான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தற்போது போடப்பட்டுள்ள 15 நாட்கள் முழு தடை பாலிவுட்டில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும்
மகாராஷ்ட்ராவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இது போன்ற லாக்டவுன் போட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. மீண்டும் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களும், படப்பிடிப்புகளும் ரத்து செய்யும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டால் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் பலரது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் அரசு அவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











