புதிய முதல்வரைக் கண்டு கொள்ளாத திரையுலகம்!
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு, இதுவரை குறைந்தபட்சம் வெளிப்படையாக ஒரு வாழ்த்துக் கூடச் சொல்லவில்லை தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அமைப்புகள்.
ஏகப்பட்ட பிரச்சினைகள், தடைகள், மல்லுக்கட்டுகள், கலவரங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சட்டப்படி முதல்வராகியுள்ளார்.

பொதுவாக ஒரு புதிய முதல்வர் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரபலங்கள் முந்திக்கொண்டு வாழ்த்துவார்கள். முக்கியமாக திரைத்துறையினர் விழா எடுத்து கவி பாடி, மலர் கிரீடம் சூட்டி வாழ்த்துவார்கள். திரைத்துறையின் ஒவ்வொரு சங்கமும் தனித்தனி வாழ்த்துக்கடிதம் அனுப்பும்.
ஆனால் இப்போது மயான அமைதி. அதுவும் கமல் ஹாஸன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் அரசியல் விமர்சனம் செய்கிறார்கள், அரசுக்கு எதிரான நிலையை எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நான்கு ட்வீட் என்று முறை வைத்துக் கொண்டு, டிக்ஷ்னரி வைத்துப் பார்த்தாலும் கூடப் புரியாத அளவுக்கு விமர்சனம் செய்து வருகிறார் கமல். செங்கோட்டையன் டென்சனாகி, கமலை வெளுக்கும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.
இதுவரை தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பிரபலமும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. எதிலும் நேர்மறை நிலைப்பாட்டை எடுக்கும் ரஜினியிடமிருந்து கூட வெளிப்படையான வாழ்த்து இல்லை.
எடப்பாடி பழனிச்சாமியின் கொங்குப் பகுதியிலிருந்து சிவகுமார், சூர்யா உள்பட ஏராளமான நடிகர்கள், கலைஞர்கள் வந்துள்ளனர். ஆனால் அத்தனைப் பேரும் அமைதியாக உள்ளனர். மாறாக மாதவன், சித்தார்த், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் புதிய தேர்தல் வேண்டும் என்கிறார்கள்.
இந்த எதிர்ப்பு நிலை எவ்வளவு காலத்துக்குத் தொடரும்? இன்னும் நான்காண்டுகள் அதிமுக ஆட்சிதான். அந்த ஆட்சியின் தயவு திரைத் துறைக்கு நிறையவே தேவை. மானியம், சலுலைகள், வரி விலக்குகள், விருதுகள், ஒதுக்கீடுகள் என பல விஷயங்களுக்காக திரைத்துறை அரசை அணுக வேண்டிய நிலை உள்ளது. எனவே எதுவரை இந்த வைராக்கியத்தை திரைத் துறையினர் தொடரப் போகிறார்கள்.... பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











