CM Vijay: எல்லாமே ஈஸியா கிடைச்சிட்டா.. விஜய் என்ற நபருக்கு என்ன வரலாறு இருக்கு? சில்லறையை சிதறவிடும் ரசிகர்கள்
சென்னை: அப்பாடா.. ஒரு வழியாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார், C. ஜோசப் விஜய். தளபதி விஜய்யை தமிழ்நாட்டின் உச்சத்தில் அமர வைத்து அழகு பார்க்க நினைத்த அவரது கோடான கோடி நண்பா மற்றும் நண்பிகளின் கனவு, ஆசை என எல்லாம் நிறைவேறும் நாள் மே 10. இதுநாள் வரை எப்படி விஜய் ரசிகர்கள் ஜூன் 22ஆம் தேதியை திருவிழாவாக கொண்டாடினார்களோ, அதேபோல் இந்த மே 10ஆம் தேதியையும் திருவிழாவாக கொண்டாட உள்ளார்.
விஜய் என்ற மனிதரின் திரை வாழ்க்கையும் சரி, அரசியல் வாழ்க்கையும் சரி ஏதோ ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டு மலர்ச்செண்டுகளால் அலங்கரிக்கப்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க வலி, வேதனை, நிராகரிப்பு, அவமானம், விடாமுயற்சி என எல்லாவற்றாலும் நிறைந்தது.

அது சரி, இது எல்லாம் இல்லை என்றால் விஜய் என்ற ஒற்றை அடையாளத்தின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல என்ன வரலாறு இருந்துவிடப் போகிறது. அவரது திரை வாழ்க்கை குறித்து கூறுகையில் பலரும் கூறும் விமர்சனம், அப்பா இயக்குநர், விஜய் அப்பா வீட்டை விற்று படம் எடுத்தார், விஜய்க்கு தாங்கி நிற்க அவருடைய அப்பா பின்னால் இருந்தார், விஜய் ஒரு நெபோ கிட்ங்க என்று விமர்சிப்பவர்களை இப்போதும் கூட பார்க்க முடியும்.
அரசியல்: தமிழ் சினிமாவில் திறமையை வளர்த்துக் கொள்ளாத, சினிமாவை புரிந்து கொள்ள பல நெபோ கிட்கள் காணாமல் போயுள்ளனர். விஜய் அப்படிக் காணாமல் போனவர் இல்லை, விஜய் தனது திறமைகளை தேடித் தேடி வளர்த்துக் கொண்டவர். ஆரம்ப காலத்தில், ' நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்ங்க' என்று கூறியவர், அதன் பின்னர் அரசியல் குறித்தும் தெரிந்து கொண்டு, அரசியல் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குத்தீட்டி: விஜய் திரையில் பேசிய பல விஷயங்களை பல நடிகர்கள் நிஜத்தில் கூட பேசுவதில்லை. சினிமாவில் எப்படி தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள கடின உழைப்பைச் செலுத்தினாரோ, பல அவமானங்களை எதிர் கொண்டாரோ, அதேபோல் அரசியலில் காலடி எடுத்து வைத்த இரண்டு ஆண்டுகளுக்குள் விஜய் படாத பாடு பட்டு விட்டார். விஜய் குறித்து குத்தீட்டியாக வந்த கேள்விகளுக்கு எல்லாம் விஜய் கப்சிப் என இருந்தாலும், அவரது ரசிகர்களோ, விஜய் இப்போதுதான் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரை நோக்கி இவ்வளவு கேள்விகளை வீசும் நீங்கள், ஏற்கனவே அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களிடம் கேட்டதுண்டா என்று பதில் கேள்வி எழுப்பி பதற வைத்துவிடுகிறார்கள்.
நம்பிக்கை: முதல் தேர்தலிலேயே 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது தவெக. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் விஜய் வென்றுள்ளார். அவரை திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் தமிழ்நாடு அள்ளி அணைத்து உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னோடி மாநிலம். வேகமாக வளரும் மாநிலம், இப்படியான மாநிலத்தின் முதலமைச்சர் அரியாசனம் என்பது ஏதோ, பட்டுத் துணிகளால் வெல்வெட்டு துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டது அல்ல, கிட்டத்தட்ட அதிக வெப்பத்தை எதிர்கொண்டு முடிவுகள் எடுக்கும் பொறுப்பு. அதை ஜோசப் விஜய் என்ற நீங்கள் திறம்பட கையாளுவீர்கள் என்று நம்பி வீடு வீடாக, ஒவ்வொரு தனிநபராக ரசிகர்கள் வாக்குச் சேகரித்துள்ளனர். அப்படி இருக்கையில் அந்த நம்பிக்கையை உழைப்பை விஜய் காப்பாற்றுவார் என்ற உத்வேகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சராக இருப்பது சவால் நிறைந்தது தான், எல்லாமே ஈஸியா கிடைச்சிட்டா.. விஜய் என்ற நபருக்கு என்ன வரலாறு இருக்கு? என ரசிகர்கள் பலரும் சில்லறையை சிதற விடுவதையும் பார்க்க முடிகிறது.



Click it and Unblock the Notifications