TVK Vijay:விஜய் செய்வது உன்னதப்பணி! மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிகழ்ச்சிக்கு சீமான் வாழ்த்து
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே தனது ரசிகர் நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சட்டமன்றங்கள் வாரியாக நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது கட்சியின் மூலம் வழங்குகின்றார்.
முதற்கட்டமாக இன்று அதாவது ஜூன் 28ஆம் தேதியன்று சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை. நாமக்கல்,நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை,தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருகின்றார்.

அடுத்து வரும் ஜூலை 3ஆம் தேதி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

போதைப் பொருளுக்கு நோ: விஜய் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, " மாணவர்களாகிய நீங்கள் எப்போதும் போதைப் பொருளுக்கு 'நோ' சொல்ல வேண்டும் என பேசினார். போதைப்பொருட்களில் இருந்து அரசாங்கம் நம்மைக் காக்கவேண்டும் என்பதை விட நமது உடல் நலத்தின் மீது நாம்தான் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும். போதையினால் உங்களின் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் அதிகமாக இருப்பதைப்பார்க்கும்போது எனக்குமே அச்சமாகத்தான் இருக்கின்றது. " Say No To Temporary Pluses, Say No To Drugs"என விஜய் இரண்டு முறை கூற மாணவர்கள் திரும்பச் சொன்னார்கள்."

சீமான் வாழ்த்து: இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் விஜய்க்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட எக்ஸ் பக்க பதிவில், "கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

உன்னதப்பணி: 'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி' எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











