நான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி
சென்னை:நான் மீண்டும் தவறு செய்யும்போது வச்சு செய்யுங்க, தற்போது வேண்டாம் என்று நடிகை கஸ்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து விளையாட்டாக ட்வீட் போட்டார் நடிகை கஸ்தூரி. அதுவும் திருநங்கைகளின் புகைப்படத்துடன் போட்டார். அதை பார்த்த திருநங்கைகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் வீட்டின் முன்பு போராட்டமும் நடத்தினார்கள். இதையடுத்து அவர் ட்வீட்டை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் கஸ்தூரி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

மன்னிப்பு
ரொம்ப வேடிக்கையாக பேசுவதாக நினைத்து ரொம்ப தப்பாக ஒரு ட்வீட் செய்துவிட்டேன். அதனால் நான் ரொம்ப மதிக்கிற என்னுடைய நண்பர்கள், சகோதர, சகோதரிகளுடைய மனசு வேதனைப்படுகிறது என்பது புரிந்த உடனேயே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறேன்.

விளக்கம்
எல்.ஜி.பி.டி. நண்பர்கள் பலருடன் நான் நன்கு பழகுவது அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் நேரடியாகவே என்னுடைய வருத்தத்தையும், விளக்கத்தையும் தெரிவித்துள்ளேன். சமூக வலைதளங்களில் திருநங்கைகளிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளேன், மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை கடிந்தாலும், பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்கள்.

உண்மை
யாருமே பார்க்காமல் சீக்கிரமே முடிந்து போக வேண்டிய விஷயம் நீக்கப்பட்ட ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பரப்புபவதால் உண்மைக்கு புறம்பான சர்ச்சையாக மாறுகிறது. ஸ்கிரீன்ஷாட்டை பரப்பி பரப்பி என் சகோதர, சகோதரிகள் மற்றும் என் மனதை காயப்படுத்துகிறீர்கள்.
சாரி
நான் மனுஷி தாங்க. நான் மறுபடியும் தவறு செய்வேன். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டாங்க. நானும் தவறு செய்வேன் அப்ப நீங்க என்னை வச்சு செய்யுங்க. இப்ப நான் செய்தது தப்பு தான், சாரி கேட்டுக் கொள்கிறேன் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











