இவன் யாரென்று தெரிகிறதா... காமெடி பட நாயகனாகிறார் ‘ஆபிஸ்’ விஷ்ணு
சென்னை: ஆபிஸ் சீரியலில் நடித்த விஷ்ணு, ‘இவன் யாரென்று தெரிகிறதா' படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஆபிஸ் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் விஷ்ணு. இவர் தற்போது ‘இவன் யாரென்று தெரிகிறதா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
கமலின் விஸ்வரூபம் படப் பாடலை தலைப்பாகக் கொண்டு தயாராகி வரும் இப்படத்தை சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ்குமார் இயக்குகிறார். சதுரம் பட நாயகி வர்ஷாவும், சதுரங்க வேட்டை படத்தில் நடித்த இஷாரா நாயரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

காதலியைத் தேடி...
காதலர் தினத்தின் பிறந்த நபர் ஒருவர் தன் காதலியைத் தேடி அலைவது தான் இவர் யாரென்று தெரிகிறதா படத்தின் கதை. இதை நகைச்சுவைக் கலந்து சுவைபடக் கூறியிருக்கிறார்களாம்.

காமெடி வில்லன்கள்...
இப்படத்தில் விஷ்ணுவிற்கு நண்பர்களாக நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தில் நடித்த ராஜ்குமாரும், காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்த அர்ஜூனும் நடித்துள்ளனர். அருள்தாஸ், பகவதி பெருமாள் மற்றும் ராம் ஆகியோர் காமெடி வில்லன்களாக வருகிறார்களாம்.

நிகழ்ச்சித் தயாரிப்பாளராக...
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கிய விஷ்ணு, பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் மூலம் நாயகனாகி இருக்கிறார். இது இவருக்கு முதல்படம் அல்ல.

மாப்ள சிங்கம்...
ஏற்கனவே, விமல், அஞ்சலி நடித்துள்ள மாப்ள சிங்கம் படத்தில் இவர் வில்லத்தனம் செய்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications