பிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ!
பிகில் படத்தின் கதை தன்னுடையது என மீரான் எனும் இயக்குனர் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் கதை தன்னுடையது என மேலும் ஒரு இயக்குனர் புகார் அளித்துள்ளதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அட்லீ படங்கள் என்றாலே கதை திருட்டு சர்ச்சையில் சிக்குவது இயல்பு தான். அதிலும் விஜய் - அட்லீ கூட்டணி என்றால் கேட்கவா வேண்டும்.
தெறி படம் சத்ரியன் படத்தின் காப்பி என்றார்கள். மெர்சல் படம் அபூர்வசகோதரர்கள் படத்தின் தழுவல் என குற்றம்சாட்டினார்கள். மணிரத்னத்தின் மௌன ராகம் தான் அட்லீயின் முதல் படமான ராஜா ராணியாக உருமாறியது என்றார்கள். ஆனால் இதை எதையும் அட்லீ கண்டுகொள்ளவே இல்லை.

அட்லீயின் வாதம்
யார் கதையையும் தான் திருடவில்லை என்று தான் அட்லீ தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும், ஒரு படத்தின் மூலக்கருவை எடுத்து, அதனை இம்ப்ருவைசேஷன் (மேம்படுத்துவது) செய்வது தவறில்லை என்பதும் அட்லீயின் வாதம்.

கதை திருட்டு சர்ச்சை
மற்ற இரண்டு படங்களாவது ரிலீசான பிறகு தான் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. ஆனால் பிகில் படம் வெளியாகும் முன்பே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னுடைய கதையை திருடி தான் பிகில் படத்தை அட்லீ எடுத்திருக்கிறார் என செல்வா எனும் உதவி இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரிலீஸ் நெருங்கி வரும் சமயத்தில் படத்துக்கு இது தலைவலியாக மாறியுள்ளது.

புதிய சிக்கல்
இந்நிலையில் பிகில் படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளரும், இயக்குனருமான மீரான் என்பவர், பிகில் படத்தின் கதையை சொந்தம் கொண்டாடியுள்ளார். ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவில் முறைப்படி தான் இந்த கதையை பதிவு செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றையும் மீரான் கொடுத்துள்ளார்.

ரிலீஸ் பிரச்சினை
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதில் இருந்தே, பிகில் படத்திற்கு ஏற்கனவே பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இன்று தான் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் யு/எ தான் கொடுத்திருக்கிறார்கள்.இந்த நிலையில் மற்றொரு இயக்குனர் புகார் கொடுத்திருப்பது, பட ரிலீசை கேள்விக்குறியாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











