இப்படியா செய்வது? ஒரு ட்வீட் எப்படியெல்லாம் பாதிக்கும் தெரியுமா? பிரபல நடிகை விளாசல்!
சென்னை: பொறுப்பில்லாமல் ட்வீட் செய்வது பலரை கடுமையாகப் பாதிக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை என பிரபல நடிகை விளாசியுள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஹினா கான். ஸ்மார்ட்போன், விக்ரம் பட்டின், ஹேக்டு, லைன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹினா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நாகினி தொடரில் இப்போது நடித்து வரும் இவர், வெப் தொடரிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இன்னும் பிரபலமானவர் இவர்.

நடுநிலை பார்வை
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சுஷாந்த் விஷயத்தில், நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறோம். ஆனால் அதற்கான வழி சரியானதாக இல்லை. கடந்த சில வாரங்களாக, பெரும்பாலான சேனல்கள், சுஷாந்த் வழக்கு விசாரணை பற்றி பேசுகின்றன. பேச வேண்டாம் என்று சொல்லவில்லை, நடுநிலையான பார்வை வேண்டும் என்று சொல்கிறேன்.

பாலியல் வன்கொடுமை
நம் நாட்டில் எவ்வளவோ முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றன. அசாம் வெள்ளம், அதிகரித்து வரும் கொரோனா, பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை ஆகிய விஷயங்களிலும் மீடியா கவனம் செலுத்த வேண்டும். சுஷாந்த் விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும்.

ஆபாசமாக, அவதூறாக
அதற்கு முன், உங்கள் குற்றச்சாட்டுகளால் அவர் வாழ்க்கையை சேதப்படுத்துகிறீர்கள். இதனால் யாரையும் அவர் எதிர்கொள்ள முடியாமல் போகலாம். சோசியல் மீடியா நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்று பலர் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பும் வந்த பின்னும் என்னையும் பலர் ஆபாசமாக, அவதூறாக ட்ரோல் செய்தார்கள்.

அதிர்ச்சி அடைந்தேன்
இதை யாரோ முகம் தெரியாதவர்கள் செய்தால் பரவாயில்லை. சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கிறவர்களிடம் இருந்தே வரும்போது, அதிர்ச்சி அடைந்தேன். பலர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சாதாரணமாக, ட்வீட் செய்து விடுகிறார்கள். அது என்ன மாதிரியான மன அழுத்தத்தை, பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. பிரபலங்கள் குறித்த ஒரு ட்வீட்டுக்கு 5 லட்சம் ட்ரோல்கள் வந்து தாக்கும் என்பதை உணர்வதில்லை.

அழித்து விடுகிறார்கள்
சுஷாந்த் சிங் மறைவுக்குப் பின், சமூகவலைதளங்களில் டிரோல் செய்வது அதிகரித்து இருக்கிறது. கொலை, தற்கொலை என்ற வாசகங்களுடன் ஒருவரின் பெயரை டேக் செய்வது பதிவிடுவது நியாயமா? சாதாரணமாகக் குறை மற்றும் ட்ரோல் செய்வதன் மூலம் ஒருவரை எளிதாக அழித்து விடுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











