அவங்களை மட்டும் வச்சுக்கிட்டு சின்னத்திரை ஷூட்டிங்கை எப்படி நடத்த முடியும்? நடிகை குஷ்பு கேள்வி
சென்னை: சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகளை குறைவான ஆட்களை வைத்து நடத்த முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 2 மாதமாக சினிமா, சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நடக்கவில்லை.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை செய்துவரும் தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது.

ஆர்.கே.செல்வமணி
ஆனால், 20 உறுப்பினர்கள் மட்டும்தான் அதில் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தது. ஏறக்குறைய 150-லிருந்து 200 தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய இடத்தில் 20 தொழிலாளர்களை கொண்டு பணிபுரிவது இயலாத காரியம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

முடியவில்லை
இந்நிலையில் நடிகை குஷ்புவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இதுபற்றி கூறியிருப்பதாவது: சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்துங்கள் என்று அரசு அனுமதி வழங்கி ஆறு ஏழு நாட்கள் ஆகிவிட்டது. இருந்தும் ஷூட்டிங்கை ஆரம்பிக்க முடியவில்லை. 20 பேரை மட்டும் வைத்து படப்பிடிப்பை நடத்துவது சாத்தியம் இல்லை.

குறைந்தபட்சம்
சின்னத்திரை தொடரில் பொதுவாக ஒரு குடும்பம் இருக்கும். அதில் குறைந்தபட்சம் ஒரே பிரேமில் 6 முதல் 8 நடிகர், நடிகைகள் இருப்பார்கள். உதவியாளர்கள் இருப்பார்கள். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 35 பேராவது பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

எப்படி முடியும்
பெப்சி சார்பில் 35 பேர், நடிகர்-நடிகைகள் 8 பேர், அவர்கள் உதவியாளர்கள் 4 பேர் என 12 பேர் எங்கள் பக்கம் இருந்து வருவார்கள். இதில் 20 பேரை மட்டும் வைத்து எப்படி படப்பிடிப்பை நடத்த முடியும்? அதனால் இதுகுறித்து மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம்' என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











