காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன்

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு நேற்று வருவதாக இருந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்ததுடன் இந்த விவகாரம் குறித்து கமல் தமிழக அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் இது குறித்து கமலின் அண்ணனும், படத்தின் இணை தயாரிப்பாளருமான சந்திர ஹாசன் கூறுகையில்,
இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். ஒரு வேளை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முதலில் தியேட்டர்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். படத்தை ரிலீஸ் செய்ய ஏதுவாக அதில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்வது குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது. அது படத்தின் இயக்குனரான கமலின் கையில் உள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் படத்தை எடுக்கவில்லை. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரையுலகினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











