Suresh Sangaiah: மற்றொரு பேரிழப்பு! ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா மறைவு!
சென்னை: தமிழ் சினிமா உலகிற்கு இந்த மாதம் மிகவும் மோசமான மாதமாக இன்னும் சொல்லப்போனால் சோகமான மாதமாக மாறி வருகின்றது. ஏற்கனவே கடந்த 9ஆம் தேதி வயது மூப்பு காரணமாக டெல்லிகணேஷ் காலமானார். இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 15ஆம் தேதி, கிடாயின் கருணை மனு படத்தினை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இவர் கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தமிழ் சினிமா உலகத்தினரையும் பெரும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது.
சுரேஷ் சங்கையா கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் விதார்த் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக ரவீனா ரவி நடித்தார். படம் கடவுளுக்கு வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தப்படவிருந்த கிடாயின் பார்வையில் இருந்து சொல்லப்பட்டிருக்கும். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல், பெரும் பாராட்டுகளையும் குவித்தது.

அதன் பின்னர் இவரது இயக்கத்தில் வெளியான படம் என்றால் அது, பிரேம்ஜி நடிப்பில் வெளியான சத்திய சோதனை படம்தான். இந்தப் படம், ஒரு கிராமத்தில் நடைபெறும் கொலையில் இருந்து தொடங்கும். இந்தக் கொலையை யார் செய்திருப்பார்கள் என அந்த கிராமத்தில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள். படத்தினை நக்கல் நையாண்டித் தனத்துடன் எடுத்திருப்பார். இந்தப் படமும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. தற்போது இந்தப் படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.
கவலை: மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவைப் பொறுத்தவரையில் அவர், காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது மறைவுச் செய்தி ரசிகர்கள் மத்தியிலும் சுரேஷ் சங்கையா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா நேற்று, நள்ளிரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.



Click it and Unblock the Notifications











