Oscars 2023: போடு பெருமையான தருணம்..நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர்-சிம்பு பட இயக்குநர் உற்சாக ட்வீட்
சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதை அடுத்து இயக்குநர் தேசிங் பெரியசாமி உற்சாகமாக ட்வீட் செய்திருக்கிறார்.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். அல்லூரி சீதாராம ராஜு, கோமரம் பீம் என்ற இரண்டு இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கு இடையே இருந்த நட்பு பற்றியும், அவர்களது போராட்டம் பற்றியும் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரும் வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர்
ராஜமௌலி இயக்கிய படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது. எதிர்பார்த்தபடியே ராஜமௌலியின் ஸ்டைலில் படம் பிரமாண்டமாக இருந்தது. பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஆர்ஆர்ஆர் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

படத்துக்கு இணையான வரவேற்பு நாட்டு நாட்டு பாடலுக்கு
ஆர்ஆர்ஆர் படம் எப்படி பெரும் வரவேற்பைப் பெற்றதோ அதே அளவுக்கான வரவேற்பு படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. கீரவாணி இசையமைக்க, சந்திரபோஸ் பாடலை எழுதியிருந்தார். பாடலின் ட்யூனும், நடனமும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தன. இதனையடுத்து அந்தப் பாடல் பல்வேறு விருதுகளில் போட்டியிட்டது. இதனால் சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் பாடல் வெல்லும் என கணிக்கப்பட்டது.

கோல்டன் குளோப், ஆஸ்கரில் நாட்டு நாட்டு பாடல்
இந்தச் சூழலில் கோல்டன் குளோப் விருதில் இந்தப் பாடல் நாமினேஷன் ஆகி அந்த விருதை வென்றது. இதற்காக பாடலுக்கு இசையமைத்த கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் அந்த விருதை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து ஆஸ்கர் விருதிலும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் நாமினேஷன் ஆனது.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்
இந்நிலையில் 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நியூயார்க்கில் இருக்கும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இந்த விருதை கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் மேடை ஏறி பெற்றுக்கொண்டனர்.

ஆர்ஆர்ஆருக்கு குவியும் பாராட்டு
மேடை ஏறி விருதை பெற்றுக்கொண்ட கீரவாணி பேசுகையில், "கார்ப்பெண்ட்டர்ஸ் இசையை கேட்ட நான் இன்று ஆஸ்கரோடு நிற்கிறேன். இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம்" என்றார். கீரவாணி ஆஸ்கர் விருது வென்றதால் அவருக்கும், ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கும் பலர் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி, நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதை குறிப்பிட்டு, "போடு பெருமையான தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











