இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம்.. ஒத்த செருப்பு சைஸ் 7க்கு கிடைத்த அங்கீகாரம்!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பார்த்திபனின் "ஒத்த செருப்பு சைஸ் 7" இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.
அழுத்தமான நம்பிக்கை மற்றும் தெளிவான பார்வையுடன் கூடிய கூர்மையான படைப்பு திரைப்படத் துறையில் மிகவும் சக்திவாய்ந்த விஷயம்.
குறிப்பாக, அதிலும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்ற அறிவார்ந்த படைப்பாளியின் மூளையில் இருந்து வரும்போது, அது வழக்கமான வரம்புகளை உடைத்து பல சாதனைகள் படைப்பதாக இருக்கும்.

ஒத்த செருப்பு சைஸ் 7
புகழ்பெற்ற பன்முக ஆளுமையான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அற்புதமான முயற்சியில் உருவான, அவருடைய அருமை மிகு படைப்பு 'ஒத்த செருப்பு சைஸ் 7' மூலம் இது ஒரு வலுவாக நிரூபணமாகியுள்ளது. இப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முன்னோடியாக மாறியுள்ளது.

ஆஸ்கர் வரை
இந்திய மற்றும் உலகளாவிய தளங்களில் உள்ள ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்தது முதல், அகாடமி விருதுகள் மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களின் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது வரை, பல சாதனைகள் படைத்த இந்த தலைசிறந்த படைப்பு, தமிழ் சினிமாவின் களத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

இந்தோனேஷிய பஹாசா மொழியில்
ஆம்! 'ஒத்த செருப்பு சைஸ் 7' அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது, இதை PT ஃபால்கன் நவீன் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியிலும் ரீமேக்
இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அமிதாப் பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளார். தவிர, அவர் தற்போது தனது லட்சியத் திரைப்படமான 'இரவின் நிழல்' படத்தில் பணிபுரிந்து வருகிறார், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாக உலக கவனத்தை ஈர்க்கவுள்ளது.

இரவின் நிழல்
இந்த திரைப்படத்திற்கு அகாடமி விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குவதோடு, படத்தில் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

பார்த்திபன் கவிதை
இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநர் பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில், இதுகுறித்த பன்ச் கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
"நண்பகல்
வெண்பொங்கல்
வியாபாரம்
சூடுபுடிக்குதாம்!"
என பதிவிட்டு இருக்கும் பார்த்திபனின் மன வேதனையை புரிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஏனெனில், இந்த பட்ம் திரையரங்குகளில் வெளியான போது இதை வாங்கி திரையிட பல திரையரங்குகள் முனைப்பு காட்டவில்லை என்றும், எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்றும் கூறியிருந்தார் பார்த்திபன்.

மக்களின் பார்வை
இதுபோன்ற நல்ல படைப்புகளுக்கு வெறும் பாராட்டுக்கள் மட்டும் கிடைத்தால் எப்படி கமர்ஷியல் படங்களை திரையில் திருவிழா போல கண்டு ரசிக்கும் ரசிகர்கள் இப்படிப்பட்ட படைப்புகளையும் பெருமளவில் பார்த்து ரசித்தால் தானே லாபம் கிடைக்கும். அப்போது தானே தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான முயற்சியில் இயக்குநர்கள் களம் இறங்குவார்கள் என்கிற தனது நிஜ வேதனையையும் பார்த்திபன் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











