OTT Review: OTP சொல்லுங்க.. மொபைலில் நடக்கும் பண மோசடி.. ’ஜம்தாரா’ தரமான வெப் சீரிஸ் விமர்சனம்!
சென்னை: ஓடிடி தளங்களில் எந்த அளவிற்கு படங்களுக்கு ரசிகர்கள் மத்தில் வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு இன்னும் சொல்லப்போனால், அதைவிட அதிகமாக வெப் சீரிஸ்களுக்கும் உள்ளது. ஓடிடி தளங்கள் வந்த பின்னர், உலக சினிமாக்களையும், உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ், தொலைக்காட்சி சீரிஸ் ஆகிவற்றை எளிதில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய, மற்றும் ஏற்படுத்திக் கொண்டு உள்ள மோசடி என்றால், அது சைபர் கிரைம் மோசடிதான். இதனை மையமாகக் கொண்டு, எப்படி எல்லாம் திருடர்கள் திருடுகிறார்கள் என்பதை இந்த வெப் சீரிஸ் காட்டுகிறது. மேலும் இது உண்மையாக நடைபெற்ற சம்பவங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கும் இந்த வெப் சீரிஸ் மொத்தம் இரண்டு சீசன்களை கொண்டது. இதில், முதல் சீசனில் 10 எபிசோட்களும் இரண்டாவது சீசனில் 8 எபிசோட்களும் என மொத்தம் 18 எபிசோடுகள் உள்ளன. ஸ்பர்ஸ் ஸ்ரீவஸ்தவா, மோனிகா பன்வார், அனுஷ்மான் புஷ்கர், திபியெண்டு பட்டாச்சார்யா, ஆக்ஷா பரதசனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த இரண்டு சீசன்களின் கதையையும் சௌமேந்திரா பதி இயக்கியுள்ளார். சித்தாந்த் மாத்தூர் இசை அமைத்துள்ளார். முதல் சீசனில் கௌஷல் ஷாவும் இரண்டாவது சீசனில் சாயக் பட்டாச்சார்யாவும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். முதல் சீசன் 2020இலும் இரண்டாவது சீசன் 2022இலும் வெளியாகியுள்ளது.

ஜம்தாரா: சீரிஸின் மொத்த கதைக்களமும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா என்ற இடத்தில்தான் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், சைபர் கிரைம் அதிகாரிகள் ஆய்வின் படி, ஜம்தாரா பகுதியில் இருந்து தான், அதிகப்படியான சைபர் ஸ்கேம் போன் அழைப்புகள் சென்றுள்ளது என தெரிவித்துள்ளனர். எனவேதான் கதைக்களமாக ஜம்தாராவை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். ஏடிஎம்கள் அறிமுகமாகி ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கும் காலகட்டம். மக்களுக்கு ஏ.டி.எம்.,களை எப்படி பயன்படுத்துவது என்பது கூட தெரியாத காலகட்டம். இதனைப் பயன்படுத்தி, மக்களின் ஏடிஎம் எண்கள், சிவிவி எண்கள், மற்றும் ஓடிபி ஆகியவற்றை போன் கால்கள் மூலம் பேசிவாங்கி, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ( கார்டு மேல இருக்குற 16 டிஜிட் நெம்பர் சொல்லுங்க... என்ற கால் ரெக்கார்ட் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்)

சைபர் கிரைம்: அதற்கு ஐடி துறையில் வேலையில் இருப்பவர்கள், வங்கித் துறையில் வேலையில் இருப்பவர்கள் மூலம், யார் வங்கியில் அதிக பணம் வைத்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அவர்கள் கொடுக்கும் விபரங்களுடன், மோசடியில் ஈடுபடுகின்றனர். இப்படி மோசடி நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் போது, திருடர்கள் தங்கள் திருட்டுத்தனத்தை மேலும் நவீனப்படுத்தி விடுகிறார்கள். திருடர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த, ஆங்கிலம் பேசத் தெரிந்த பெண்கள் தொடங்கி, பல மொழிகள் பேசத் தெரிந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஜம்தாரா சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கும் பலரும் இந்தத் திருட்டு தனத்தை சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் தொழிலாக செய்கிறார்கள். அதுவும் பள்ளிக் குழந்தைகள் இந்த கிரைமில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக காவல் துறைக்கும் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வர, இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மீதி கதையாக உள்ளது.

எப்படி இருக்கு?: இந்த வெப் சீரிஸை அதன் திரைக்கதைக்காக பார்க்கலாம். ஏ.டி.எம் கார்டின் பின் எண்ணைக் கண்டுபிடிக்க பின்பற்றப்படும் ஐடியாவைப் பார்க்கும்போது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்துமே அட்டகாசமாக செய்துள்ளார்கள். கதாபாத்திரத் தேர்வும் பிரமாதமாக உள்ளது. தமிழிலேயே இந்த வெப் சீரிஸ் உள்ளது. இரண்டாவது சீசன் முடிவில், சைபர் கிரைம் செய்துவந்த கதாநாயகி ஜம்தாராவின் புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு விடுகிறார். இதனால் மூன்றாவது சீசன் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபாச வார்த்தைகள் ஆங்காங்கே இடம் பெறுகிறது. சில சென்டிமென்ட் காட்சிகளைப் பார்க்கும்போது திருடர்கள் மீது நமக்கே பரிதாபம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தரமான வெப் சீரிஸ் மிஸ் பண்ணாம பாருங்க.



Click it and Unblock the Notifications











