"போதும்பா சாமி... ஒரு படத்த எடுத்து அத ரிலீஸ் பண்றத்துக்கு இத்தனை அக்கப்போரா"... கதறும் ஹீரோ!
நேதாஜி பிரபு தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள 'ஒளடதம்' திரைப்படம், இம்மாதம் 24ம் தேதி ரிலீசாகிறது.
சென்னை: பல்வேறு இடையூறுகளைக் கடந்து, மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது 'ஒளடதம்' திரைப்படம்.
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஒளடதம்'. நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில மோசடிக்காரர்களின் சதியால், பட ரிலீசுக்கு உயர் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் புதிதாக படம் எடுக்க வருபவர்களை ஏமாற்றும் கும்பலிடம் சிக்கிக் கொண்டது ஔடதம். ஒரு வழியாக நீதிமன்றத்தில் போராடி, படத்தின் மீதான தடையை நீக்கியிருக்கிறார் நேதாஜி பிரபு. இதையடுத்து இப்படம் வரும் 24ம் தேதி ரிலீசாகிறது.

சினிமா காதல்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேதாஜி பிரபு, "சினிமா மீது இருந்த காதலால், நான் பார்த்துக்கொண்டிருந்த பெரிய வேலையை விட்டுவிட்டு, சொந்த பணத்தில் படம் எடுத்தேன். அதுவும் முதல் படத்தை ஒரு மெடிக்கல் திரில்லர் படமாக எடுத்திருக்கிறேன்.

புதிய தயாரிப்பாளர்கள்
எங்களை போன்ற புதிய தயாரிப்பாளர்களை வழிநடத்த தமிழ் சினிமாவில் ஆட்கள் இல்லை. மாறாக எங்களை ஏமாற்றி பணம் பறிக்கத்தான் பார்க்கிறார்கள். பட ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து கிட்டத்தட்ட ரூ.15 லட்சத்துக்கு மேல் நஷ்டம் அடைந்துவிட்டேன்.

மோசடி பேர்வழிகள்
அஜ்மல் கான் என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் படத்திற்கு தடை வாங்கியதுடன், சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை என்னிடம் இருந்து பறிக்கப் பார்த்தார். ஆனால் சட்டப்படி போராடி படத்தின் மீதான தடையை நீக்கியிருக்கிறோம்.

போதும் போதும் என்றாகிவிட்டது
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு படம் எடுத்தால், அதை ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆளவிட்டா போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒரு வழியாக வரும் வெள்ளிக்கிழமை மே 24ம் தேதி படம் ரிலீசாகிறது. எங்களை போன்ற புதியவர்களின் முயற்சிக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்". இவ்வாறு நேதாஜி பிரபு கூறினார்.


Click it and Unblock the Notifications