கர்ணன், மாமன்னன் மொக்கை படங்களா?.. ’வாழை’ இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் காட்டம்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்துடன் போட்டியாக வாழை வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் என்ன மொக்கை படங்களா? எனக் கேள்வி எழுப்பி காட்டமாக பேசியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டும் பலரும் கர்ணன் பிடிக்கவில்லை என்றும் மாமன்னன் படங்கள் பிடிக்கவில்லை என பேசுவதை பார்க்க முடிகிறது. அது ஏன்? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது என வெளிப்படையாக மனதில் பட்டதை பேசியுள்ளார் பா. ரஞ்சித்.

மாரி செல்வராஜ் படங்களில் வெளிக்காட்டுவதை போல வலியை தன்னால் வெளிக்காட்ட முடியாது என்றும் பா. ரஞ்சித் மாரி செல்வராஜின் இயக்கத்தை பாராட்டி பேசியுள்ளார்.
மாரி செல்வராஜின் வாழை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி நடித்துள்ள வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. மாரி செல்வராஜின் இளம் வயது வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியிருப்பதாக கூறுகின்றனர்.
தங்கலான் வெற்றியால் மகிழ்ச்சி: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் நடித்த தங்கலான் படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற நிலையில், மகிழ்ச்சியில் இருக்கும் பா. ரஞ்சித் வாழை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியது டிரெண்டாகி வருகிறது.
கர்ணன், மாமன்னன் மொக்கை படங்களா?: யாரை பார்த்தாலும் எனக்கு பரியேறும் பெருமாள் படம் பிடிக்கும், அதன் பின்னர் வாழை படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க, அவங்களை பார்த்துக் கேட்கிறேன், அப்போ கர்ணன், மாமன்னன் படங்கள் என்ன மொக்கைப் படங்களா? அந்த இரண்டு படங்களிலும் ஹீரோ திருப்பி அடிக்கிறான். அதனால், பிடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் ரொம்ப மோசம். இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படித்தான் படம் எடுக்கணும்னு சொல்வீங்க, அந்த சூழல், அவனோட நிலைமை, அவனை அப்படி திருப்பி அடிக்கத் தூண்டும் சமூகம் என்பதை எல்லாம் புரிந்துக் கொள்ள மறுப்பது சரியில்லை என பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் வேறமாறி: வலிகளை சினிமாவில் காட்சிகளாக கடத்த வேண்டும் என நான் நினைக்கவே மாட்டேன். அதிலிருந்து மீண்டு வெற்றியை பெறுபவனையே கதையின் நாயகனாக வைத்து படங்களை எடுத்து வருகிறேன். ஆனால், மாரி செல்வராஜின் பார்வையே வேறு, தான் பட்ட வலிகளை அப்படியே திரையில் படமாக எடுத்துக் காட்டி, அனைவரையும் கேள்விக் கேட்டு உலுக்கிவிடுவான் என பா. ரஞ்சித் மாரி செல்வராஜை பாராட்டி பேசியுள்ளார்.
யார் அந்த இயக்குநர்: மேலும், மாரி செல்வராஜ் அனைத்து இயக்குநர்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டி அவர்களின் கருத்துக்களை வாங்கியது எல்லாம் சூப்பர் மேட்டர். எனக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த இயக்குநர் என்னோட படங்களை பார்ப்பார். ஆனால், அதுபற்றி பேச மாட்டார். அவருக்கே படத்தைப் போட்டுக் காட்டி, நல்ல ஒபினியன் வாங்கியது எல்லாம் தரமான சம்பவம் என பா. ரஞ்சித் பேசியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தை தான் குறிப்பிட்டு ரஞ்சித் பேசினார் என நெட்டிசன்கள் மாரி செல்வராஜை மணிரத்னம் பாராட்டும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











