சந்தோஷ் நாராயணன் மியூசிக் பிடிக்கல.. மேடையிலேயே சொன்ன பா. ரஞ்சித்.. ச. நா ரியாக்ஷன் பாக்கனுமே
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என இருவரும் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்கள். அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், அதே படத்தில் சந்தோஷ் நாராயணனுடன் பணியாற்றினார். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இவர்கள் தொடர்ந்து பணியாற்றினார்கள். குறிப்பாக, அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை என தொடர்ந்து ஐந்து படங்களில் பணியாற்றினார்கள். இதுமட்டும் இல்லாமல், ரஞ்சித்தின் தாயாரிப்பு நிறுவனத்தில் உருவான படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார்.
இதையடுத்து ஒரு பிரச்னையில் இருவருக்குள்ளும் விரிசல் விழுந்தது. எனவே, இருவரும் தொடர்ந்து இணைந்து படம் பண்ணாமல் இருந்தனர். இப்படியான நிலையில், பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் என இருவரும் சூது கவ்வும் 2 படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஞ்சித் தனக்கு சந்தோஷ் நாராயணின் இசை பிடிக்கவில்லை எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

வெற்றிக் கூட்டணி: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றனர். மேலும் வெற்றிக் கூட்டணியாகவும் வலம் வந்தனர். இவர்களின் கூட்டணியில் ஒரு படம் வருகின்றது என்றாலே, ரசிகர்கள், மத்தியில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.

பிரிவு: குறிப்பாக, முதல் படத்தில் இருவரும் பலரது கவனத்தினை ஈர்த்துவிட்டதால், மெட்ராஸ் படத்தில் தரமான இயக்கத்தை ரஞ்சித்தும் அதற்கு துளியும் சளைக்காத பின்னணி இசையை சந்தோஷ் நாராயணனும் கொடுத்திருப்பார்கள். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த, சார்பட்டா பரம்பரை படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி இவை இரண்டுமே, ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதன் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பினால், இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். ரஞ்சித் அதன் பின்னர் இரண்டு படங்களை இயக்கிவிட்டார். இதில் நட்சத்திரம் நகர்கின்றது படத்தில் தென்மாவும், தங்கலான் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரும் இசை அமைத்தனர்.

பிடிக்கல: இந்நிலையில், சூதுகவ்வும் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர்கள் இருவரும் தங்களது பழைய நினைவுகளை, குறிப்பாக முதல் சந்திப்புகளை நினைவு கூர்ந்தனர். அதிலும் குறிப்பாக, பா. ரஞ்சித் பேசும்போது, தான் முதலில், சந்தோஷ் நாராயணனைச் சந்திக்கும்போது, அவர் சில ட்யூன்களை வாசித்துக் காட்டினார். ஆனால் அவையெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை எனக் கூறினார். அப்போது மேடையில் இருந்த சந்தோஷ் நாராயணன், சிரித்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தார். மேலும் இருவரும் மாறி மாறி கலாய்த்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











