Pa. Ranjith: ஓவர் குடி.. தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.. கண்ணீரோடு பேசிய பா. ரஞ்சித்.. ரசிகர்கள் ஷாக்
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில், மிகவும் முக்கியமான இயக்குநராகவும், அரசியல் களத்தில் முக்கியமான செயல்பாட்டாளராகவும் உள்ளார். அம்பேத்கரிய தத்துவத்தை முன் வைத்து தனது படங்கள், சமூக செயல்பாடுகளை முன் வைத்து வரும் பா. ரஞ்சித், இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகவும் முக்கியமானது. இவரது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பாட்டில் ராதா என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் தயாரிப்பாளரும் இயக்குநருமான பா. ரஞ்சித் பேசும்போது, தான் தற்கொலை செய்ய எண்ணியதாக கூறினார்.
தினகரன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பாட்டில் ராதா. இந்தப் படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம், போதைக்கு அடிமையானவர், அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று அதாவது, ஜனவரி 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது தான் தற்கொலைக்கு முயற்சி செய்தது குறித்து பேசினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, " இந்தப் படத்தில் வரும் அஞ்சலைதான் எனது அம்மா. எனது அப்பா, என்னையும் எனது சகோதரர்களையும் உணவுக்காகவோ, பணத்திற்காகவோ யாரிடமும் கொண்டு போய் நிறுத்தியது கிடையாது. நாங்கள் உடுத்தும் உடை, எங்களது கல்வியில் மிகவும் கவனமாகவே இருந்தார்.
தற்கொலை: இவ்வளவு செய்த எனது அப்பா, குடி என வரும்போது, தன்னையே இழந்து விடுவார். ஒரு திருவிழா வந்தால், ஊரே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனது அம்மா மட்டும் அழுது கொண்டே இருப்பார். எங்க அம்மா அழுவதை என்னால் பார்க்கவே முடியாது. அப்போது நான் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் இரவு, எனது அம்மா அழுவதை பார்க்க முடியாமல் தவித்து வந்த நான், தற்கொலை செய்துகொள்ளலாமா என எல்லாம் யோசித்து இருக்கின்றேன். எனது அப்பாவை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வர, எனது அம்மா, அண்ணன் மற்றும் தம்பிதான் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன்.

கண்ணீர்: ஆனால் எனது அப்பாவிற்கு இன்னும் கொஞ்ச நாள் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தது. எனக்கு இன்னும் கொஞ்ச நாள் வாழனும் போல இருக்குடா என என்னிடம் கூறினார். மருத்துவர்கள் எனது அப்பா இன்னும் 6 மாதங்கள் வரை இருப்பார் எனக் கூறியிருந்தார்கள். ஆனால், அவர் ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டார். எனது அம்மா அழுது கொண்டு இருந்ததைப்போல், எனது மனைவியும் எனது குழந்தைகளும் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என கலங்கிய கண்ணீருடன் பேசினார். இவரது இந்தப் பேச்சினைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல.. : மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.



Click it and Unblock the Notifications











