பா.ரஞ்சித் வழங்கும் 'மெட்ராஸ் மேடை'.. மே 19-ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!
சென்னை : இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடத்திய 'Casteless collective' இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியை ரசிக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதைத்தொடர்ந்து 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனி இசைக்கலைஞர்கள் பங்குபெறும் 'மெட்ராஸ் மேடை' பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்.
சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே 19-ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசைக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளும் இடவசதி கொண்ட வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' படத்தை இயக்கியிருக்கும் பா.ரஞ்சித், ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'பரியேறும் பெருமாள்' படத்தைத் தயாரித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











