அப்போ ஜார்ஜ் ஃப்ளாய்டு.. இப்போ சாத்தான் குளம் தந்தை, மகன் மரணம்.. இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம்
சென்னை: சாத்தான் குளத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மூச்சுத் திணறியும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

வெறிச் செயல்
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில், போலீஸ்காரர்களின் வெறிச் செயல் என்றும், படுகொலை செய்த போலீஸாரை தண்டிக்க வேண்டும் என்றும் அந்த ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினர் கொந்தளித்து வருகின்றனர். போலீஸ்காரர்களின் அட்டூழியத்தை கண்டித்து வணிகர்கள் சங்கம் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

மெளனம் காக்கும் பிரபலங்கள்
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி எப்படி காலால் நெரித்துக் கொன்றாரோ அதே போல தான் சாத்தான்குளத்திலும் நடந்துள்ளது என இரண்டையும் பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக இங்கே பிரபலங்கள் குரல் கொடுத்த நிலையில், சாத்தான்குள மரணத்திற்காக யாரும் குரல் கொடுக்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

கொந்தளித்த ரஞ்சித்
இந்நிலையில், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய பா. ரஞ்சித், "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா??" என கொந்தளித்து டிவீட் போட்டிருக்கிறார்.

ஆதரவும் எதிர்ப்பும்
தமிழக அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ள இயக்குநர் பா. ரஞ்சித் டிவீட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், ஏன் மற்ற பிரச்சனைகளின் போது வாய் திறக்கவில்லை என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக பா. ரஞ்சித் ஜார்ஜ் ஃப்ளாய்டு படுகொலைக்கும் டிவீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











