இளையராஜாவுக்கு அந்த விஷயத்தில் ஆதரவு குரல் கொடுத்த பா. ரஞ்சித்.. பாராட்டும் ரசிகர்கள்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இளையராஜாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், இளையாராஜாவின் சாதியை வைத்து இழிவாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவனை கண்டித்து பா. ரஞ்சித் பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், விமர்சனத்தை உரிய முறையில் வைக்க வேண்டுமே தவிர கீழ்த்தரமாக வைக்கக் கூடாது என்கிற பா. ரஞ்சித்தின் கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷனின் அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அம்பேத்கர் இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார் என்றும் அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்றும் எழுதியிருந்தார்.

எப்படி ஒப்பிடலாம்
அம்பேத்கரையும் மோடியையும் இளையராஜா எப்படி ஒப்பிட்டு பேசலாம் என ஏகப்பட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்க மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தனது கருத்தை கூறிவிட்டார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையாராஜா குறித்து பேசியது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

உயர்ந்த சாதி
"பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறாங்க. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது" என ஈவிகேஸ் இளங்கோவன் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பா ரஞ்சித் கண்டனம்
"பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது." என பா ரஞ்சித் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஆதரவுக்கு பாராட்டு
இளையராஜாவின் கருத்தில் பா ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவரை இப்படி மோசமாக விமர்சிக்கக் கூடாது என தனது கண்டனத்தை பதிவு செய்தது பாராட்டுக்குரிய விஷயம் என பா ரஞ்சித்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூடர்கூடம் இயக்குநர்
"பெரியாரையும் அம்பேத்கரையும் உள்வாங்காததால்தான் EVKSElangovan காங்கிரசில் சேர்ந்தார். பிறப்பின் அடிப்படையில் அறிவு வருவதில்லை என்பதற்கு இவரே உதாரணம். இளையராஜா கருத்தை விமர்சிக்காமல் அவரையும் அவர் சாதியையும் விமர்சிப்பது பெரியாரிய மேடைக்கு உகந்ததல்ல" என மூடர்கூடம் இயக்குநர் நவீன் கண்டித்ததையும் ரீட்வீட் செய்துள்ளார் பா ரஞ்சித்.


Click it and Unblock the Notifications











