யாராவது மயக்கம் போட்டாலும் கண்டுக்கமாட்டேன்.. கருணையே இல்லை.. தங்கலான் பா.இரஞ்சித் ஓபன் டாக்
சென்னை: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அவர் இப்போது விக்ரமை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கும் சூழலில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பா.இரஞ்சித் தன்னை பற்றியும் தங்கலான் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
தமிழ் சினிமாவின் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் அவர் இப்போது தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார்.இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க; ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

எதிர்பார்ப்பில் படம்: பா.இரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் நட்சத்திரம் நகர்கிறது படம் மட்டும்தான் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக அவர் இயக்கிய காலா, கபாலி, மெட்ராஸ், அட்டகத்தி ஆகிய நான்கு படங்களுமே சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கின. மேலும் இரஞ்சித்துக்கென்று தனித்த ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கின. இப்போது அவர் விக்ரமை வைத்து முதன்முறையாக படம் இயக்கியிருப்பதாலும்; முதன்முறையாக பீரியட் ஜானரில் படத்தை உருவாக்கியிருப்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது படம்.
ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்: கடந்த சில வருடங்களாகவே இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துவந்தது. விக்ரம் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அந்த உழைப்பு படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரெய்லர் உள்ளிட்டவைகளில் தெரிந்தது. முதலில் இந்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்த இந்தப் படம் சில காரணங்களால் தள்ளிப்போய் இந்த மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவின் பெஞ்ச்மார்க்காக இருக்கும் என்று பலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆடியோ ரிலீஸ்: இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் பா.இரஞ்சித், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், ஜிவி பிரகாஷ், ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பா.இரஞ்சித்தின் பேச்சு பல விஷயங்களை உணர்த்தி சென்றன. முக்கியமாக அம்பேத்கர் குறித்து அவர் பேசியது; தனது நிலைப்பாடு இதுதான் என்று அவர் சொல்லும் தைரியமான ஸ்டேட்மெண்ட்டாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் அவர் பேசிய இன்னொரு விஷயமும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இரஞ்சித் பேச்சு: அவர் பேசுகையில், "விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்த பிறகும் ஒரு சண்டை காட்சியை வைத்தேன். அப்போதெல்லாம் அவரது முகத்தை பார்க்காமல் மானிட்டரில் மட்டும் பார்ப்பேன். ஷாட் முடிந்ததும் எனது உதவி இயக்குநர்களில் யாரையாவது அழைத்து அவருக்கு ஓகேயானு பார்த்துட்டு வாங்க என்று சொல்வேன். அவர்கள் சென்று பார்த்துவிட்டு சார் ஓகே என்று சொல்கிறார் என்பார்கள். ஆனால் அவருக்கு வலித்துக்கொண்டுதான் இருக்கும். நானோ ஓகே சார் இன்னொரு ஒன் மோர் போகலாம் என்று கேட்பேன். அவ்வளவு கொடுமைப்படுத்தினேன். சாரி விக்ரம் சார்.
கண்டுக்கமாட்டேன்: பார்வதி இங்கு பேசும்போது இரஞ்சித் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் பேசமாட்டார் என்று சொன்னார். அது உண்மைதான். ஏனெனில் இந்தப் படத்துக்காக அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். அந்த உழைப்புக்கு பதிலாக படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் யாரிடமும் பெரிதாக பேசவே இல்லை. யாராவது மயக்கம் போட்டு விழுந்தால்கூட அவர்களை கண்டுக்கமாட்டேன். அந்த அளவுக்கு கருணை இல்லாமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்துகொண்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











