நான் சந்தித்த தீண்டாமை கொடுமைகள் இவைகள்தான்.. போட்டுடைத்த இயக்குநர் இரஞ்சித்
சென்னை: பா.இரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பிறகு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர். இதனாலேயே அவர் வெகு சில படங்களில் கவனம் பெற்ற இயக்குநராகிவிட்டார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் வானம் கலைத் திருவிழாவில் இரஞ்சித் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அம்பேத்கரின் பிறந்தநாளை தலித் மாதமாக பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கொண்டாடுகிறது. அதற்கு வானம் கலைத் திருவிழா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பா.இரஞ்சித் அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதில் பேசிய இரஞ்சித், "என்னுடைய சொந்த ஊரில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். நாங்கள் 50 குடும்பங்கள் அந்த ஊரில் இருந்தோம். ஒரு சிறிய காலனியை சேர்ந்தவர்கள்தான் நாங்கள்.

உள்ளே செல்ல முடியாது: நாங்கள் தலித் என்பதால் அந்தக் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது. மேளம் அடிக்கலாம் ஆனால் கோயிலுக்குள் செல்ல முடியாது. ஒரு கயிறு இருக்கும். தீ மிதி எல்லாம் ஜோராக நடக்கும். நாங்கள் அந்த கயிறு கட்டப்பட்டிருக்கும் இடத்தில் நின்றுதான் தீ மிதியை பார்க்க வேண்டுமே தவிர; அந்த கொண்டாட்டத்திலோ, பூஜையிலேயோ கலந்துகொள்ள கூடாது. இந்தத் தீண்டாமை பிடிக்காததால் அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளமாட்டேன்.
எனக்கும் ஆசை வந்தது: ஆனால் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தீ மிதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் வந்தது. எனவே கங்கை அம்மன் கோயிலில் காப்பு கட்டி தீ மிதிக்கலாம் என நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து முடிவு செய்து நாங்களே ஒரு மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டோம். இது தெரிந்து எங்கள் பகுதியை சேர்ந்த சில சிறுவர்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டார்கள். பிறகு நாங்கள் வீடு வீடாக சென்று அரி வாங்கும். அதையெல்லாம் பார்த்த காலனியில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டில் இருந்த சிறுவர்களையும் காப்பு கட்ட சொன்னார்கள். பெரியவர்களும் காப்பு கட்டிக்கொண்டார்கள்.
விளையாட்டாக செய்தேன்: நான் விளையாட்டாக செய்தது சடங்காக மாறியது. பொது இடம் என்பதற்காக ஒரு மரத்தைக்கூட வெட்டவிட மாட்டார்கள். ஆனால் அந்தச் சடங்கு சமயத்தில் தீ மிதிக்காக அனைத்து மரங்களையும் வெட்டினோம். யாரும் எதுவும் சொல்லவில்லை. மூன்று நாட்களும் வீட்டுக்கு போகக்கூடாது என்று சொல்லி எங்களுக்கு சாப்பாடு சமைத்து கொடுத்தாரக்ள். அது ஒரு கொண்டாட்டமாக இருந்தது.
அலங்காரம்: என்னுடைய அம்மா வீட்டில் இருக்கும் நகையை எல்லாம் எடுத்துவந்து எனக்கு அலங்காரம் செய்துவிட்டார். அனைவருடைய கோஷம், மேளம் அடிக்கும் சத்தம் என அந்த வைப்ரேஷன் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. அனைவரும் ஒருமுறைதான் தீ மிதித்தார்கள். ஆனால் நான் மூன்று முறை சுத்தி சுத்தி வந்து தீ மிதித்தேன். இதுதான் ஒரு தலித்தின் வாழ்க்கை. ஊரில் தீ மிதிக்க ஒரு கதை இருக்கிறது.
ஒரு கதை இருக்கு: அதேபோல் காலனியில் தீ மிதித்ததற்கும் ஒரு கதை இருக்கிறது. ஊரில் என்னை தீ மிதிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் காலனியில் நான் ஒரு கதையை உருவாக்கி நானாக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி நானாக தீ மிதிக்கும்போது ஒரு தலித் வாழ்க்கையில் கதை ஒன்றை உங்களால் பார்க்க முடியும். ஒவ்வொரு இடத்திலும் சாதி அப்பி கிடக்கிறது. பொதுவில் இருக்கும் நிலம், மரம் முதல் கடவுள்வரை உனக்கு கிடையாது என யாராவது சொல்லும்போது அதை எதிர்த்து ஒரு வாழ்க்கையை நானே உருவாக்கினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











