தேவர் மகன் வந்தபோதெல்லாம் ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை.. பா.இரஞ்சித் சாட்டையடி
சென்னை: பா.இரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பிறகு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர். இதனாலேயே அவர் வெகு சில படங்களில் கவனம் பெற்ற இயக்குநராகிவிட்டார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் பிகே ரோஸி திரைப்பட விழாவில் பா.இரஞ்சித் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் 80கள், 90களில் ஆதிக்க சாதிகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதேபோல் திரைப்படத்தின் தலைப்பிலேயே சாதி பெயரை வைத்தும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தற்போது தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறுவதுபோல் திரைப்படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அது மாதிரியான படங்கள் இப்போது அதிகம் வருவதற்கு காரணங்களில் ஒருவர் பா.இரஞ்சித். இதனாலேயே பா.இரஞ்சித் விமர்சனங்கலையும் சந்தித்துவருகிறார்.

நீலம் பண்பாட்டு மையம் விழா: இயக்கம் மட்டுமின்றி நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் பண்பாட்டு மையம், நீலம் இதழ் உள்ளிட்டவைகளையும் நடத்திவருகிறார் அவர். தற்போது சென்னை சாலிகிராமத்தில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழா நடந்தது. அதில் பேசிய இரஞ்சித், “பாலுமகேந்திராவின் படங்கள் அழகியலை பேசின. பாரதிராஜாவின் படங்கள் எளிய மக்களின் வாழ்வியலை பேசின என்பதுதான் உண்மை.
மொத்தமாக மாறியது: 90களில் தமிழ் சினிமா மொத்தமாக மாறிவிட்டது. அப்போதுதான் சின்னக்கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட ஏராளமான சாதிய படங்கள் வர தொடங்கின. சாதி பெருமையை வெளிப்படையாக பேசும் படங்களும் அப்போது வர ஆரம்பித்தன. அதில் தலித் மக்களின் கதாபாத்திரங்களை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை பார்த்தால் புரியும். சமூக சீர்திருத்தத்தை பேசிய தமிழ் சினிமாவில் அதற்கு முரணான விஷயங்கள் நடந்தன என்பதுதான் உண்மை.
முகம் மாறியது: சினிமாவின் முகம் மாறி சாதிய பெருமைகள் மட்டும் பேசப்பட்டன. அவை விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டதா என்பதுதான் கேள்வி. ஆரோக்கியமான சினிமாவில் ஏன் தலித் சாதி மனநிலையில் படம் எடுக்குறீர்கள்; அதனால்தான் சாதி புத்தியே வருகிறது. சாதியை நாங்கள் பாராட்டவில்லை. உங்களால்தான் இதெல்லாம் வருகிறது என்று சொல்கிறார்கள்.
அப்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை: 90களில் வந்த சின்ன கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட படங்கள் வந்தபோது ஏன் இந்த மாதிரியான கேள்விகள் எழுப்பப்படவில்லை. பராசக்தி போன்ற அரசியல் எழுச்சியை ஏற்படுத்திய தமிழ் சினிமாவில் அதற்கு முரணான சாதிய பெருமை பேசும் படங்கள் வந்தபோது அதுகுறித்து விவாதங்கள் எழவே இல்லை. யாரும் அதனை விமர்சிக்கவில்லை. பொதுதளத்தில் அதுதொடர்பான எதிர்வினைகள் எதிரொலிக்கப்படவே இல்லை. அவை அனைத்தும் சாதாரணமாக நடந்தது” என்றார். பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தங்கலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











