மிஷ்கினின் ஆபாச பேச்சு.. பா.இரஞ்சித், வெற்றிமாறன், அமீருக்கு அறிவு இருக்கா?.. விளாசிய பிரபலம்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் நேற்று முன்தினம் நடந்த பாட்டல் ராதா படத்தின் விழாவில் கலந்துகொண்டார். அதில் பேசியபோது தான் ஒரு குடிகாரன் என்றும்; குடிகாரனாக்கியதே இளையராஜாதான் என்றும் இஷ்டத்துக்கு பேசினார். அதுமட்டுமின்றி ஆபாசமாகவும் சில வார்த்தைகளை பேசினார். அது பெரும் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது. இந்தச் சூழலில் மிஷ்கினின் அந்தப் பேச்சு குறித்து பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனது யூடியூப் சேனலில் காட்டமாக பேசியிருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின் இப்போது ட்ரெய்ன் என்ற படத்தை இயக்கிவருகிறார். அதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க; கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது. ஒருபக்கம் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் மிஷ்கின்; மறுபக்கம் படங்களின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசி சர்ச்சைகளை சம்பாதிப்பதிலும் பிஸியாக இருக்கிறார். கொட்டுக்காளி படத்தின் விழாவில் அவர் பேசியதே மிகப்பெரிய சர்ச்சையையும், கிண்டலையும் சந்தித்தது.

பாட்டல் ராதா: சூழல் இப்படி இருக்க தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பாட்டல் ராதா படத்தின் விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள். இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின் கடும் சர்ச்சையை சந்தித்திருக்கிறார். அவரது பேச்சு அலப்பறையின் உச்சமாக இருந்தது.
என்ன பேசினார்?: அவர் பேசுகையில், "நான் உதவி இயக்குநராக இருந்தபோது குடிப்பதற்காக செல்வேன். கைகளில் இரண்டு கொசுவர்த்திகளுடன் செல்வேன். ஏனெனில் குடிக்க ஆரம்பித்தால் சினிமா பேசுவோம். அதேபோல் இளையராஜாவை பாடுவோம். நான் பாட ஆரம்பித்தால் எங்கிருந்தோ எனக்கு ஒரு பாட்டில் வந்துவிடும். முக்கியமாக இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்ப புள்ளி. இந்த போதைகளைவிடவும் இளையராஜா மிகப்பெரிய போதை" என்று பல விஷயங்களை பேசினார்.
விளாசிய பிஸ்மி: அவரது இந்தப் பேச்சு நேற்று முழுக்க முழுக்க சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது. சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனது யூடியூப் சேனலில், "மிஷ்கின் என்னவோ பெரிய அறிவாளி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வெளிநாட்டு படங்களை காப்பி அடிப்பவர். அவர் இயக்கிய நந்தலாலா படம்கூட வெளிநாட்டு படம்தான். ஆனால் அதனை எங்கேயும் கூறாமல் அந்தப் படத்தை தனது சொந்த படம் போல் கூறுவார்.
ஆபாச பேச்சு: இது ஒருபக்கம் இருக்க மற்ற படங்களின் விழாக்களில் அவர் பேசுவது எல்லாம் ஆபாசத்தின் உச்சம். பாட்டல் ராதா விழாவில் பேசிய அவர், தன்னை குடிகாரன் என்று பெருமை பொங்க பேசுகிறார். அதேபோல் பார்வையாளர்களையும் குடியுங்கள் என்கிற தொனியில் பேசுகிறார். முக்கியமாக சென்னையின் தேசிய கெட்டவார்த்தையாக சொல்லப்படும் சில வார்த்தைகளையும் பேசியிருக்கிறார். அவர் பேசியதெல்லாம் ஆபாசத்தின் உச்சம். அருவெருப்பின் உச்சம்.
அறிவு இருக்கா?: நான் மட்டும் அங்கிருந்திருந்தால் கண்டிப்பாக செருப்பை கழற்றி வீசியிருப்பேன். குறைந்தபட்சம் காரி உமிழ்ந்திருப்பேன். பா.இரஞ்சித், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் எல்லாம் அந்த மேடையில் இருந்தார்கள். இந்தப் பக்கம் மிஷ்கின் ஆபாசமாக பேசுகிறார். இவர்களோ கைத்தட்டிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சமூக பொறுப்புள்ள இயக்குநர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் மிஷ்கினின் பேச்சை கண்டித்திருக்க வேண்டாமா. இவர்களுக்கெல்லாம் அறிவு இருக்கா" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











