Thangalaan Blue Sattai Maran Review: தங்கலான் பாத்தா தொங்கலான்னு தோணிடும்.. ப்ளூ சட்டை விமர்சனம்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் தங்கலான். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்திற்கு இவரது இசைக்காகவே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்தது. இந்த படம் குறித்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடும் உழைப்பிற்கு மத்தியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாகவே கோலார் தங்கவயலுக்குச் சென்று, அங்கு படத்தினைக் காட்சிப் படுத்தியுள்ளனர். மேலும் படத்தில் லைவ் சவுண்ட் முறை பின்பற்றப்பட்டு ஒளி மற்றும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. வரலாற்றுக் கதையை மாய எதார்த்த கதைக்களத்துடன் படத்தைச் சொல்லியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் தொடங்கி துணை நடிகர்கள் வரை அனைவரும் பாராட்டத்தகுந்த அளவிற்கு நடித்துள்ளனர். விக்ரம் இந்தப் படத்திற்காக உயிரையே கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலீஸ் ஆகின்றது என்றால் அதனை ரசிகர்கள் பார்க்க வருவதற்கு முன்னர், திரைப்பட விமர்சகர்களின் அபிப்ராயத்தை தெரிந்து கொண்டு வருகின்றனர். இதில் மிகவும் அதிகப்படியான ரசிகர்களால் பின் தொடரப்படுபவர்களில் ஒருவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். ப்ளூ சட்டை மாறன் இந்த படம் குறித்து என்ன கூறியுள்ளார் என்பதைக் காணலாம். கோலார் தங்க வயலில் இருந்து தங்கத்தை எடுக்க வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கத்தை எடுக்க அவர்கள் சிந்திய ரத்தம் இழந்த உயிர் பலி என்பது அளவில்லாத விஷயம். அந்த வலியையும் வேதனையும்தான் படமாக சொல்லப்போகின்றார்கள் என நினைத்துப் போனோம்.

அரசியல் நிலைப்பாடு: ஆனால் இந்தப் படத்தில் ரஞ்சித் தான் எவ்வளவு அறிவாளி என்பதை வெளிப்படுத்தியுள்ளார். கோலார் தங்கவயல் என்ற ரத்த சரித்திரத்தை படமாக எடுக்காமல், வருணாசிரமம், சிறுதெய்வ வழிபாடு, பெருமாள், ராமானுஜம், கிருஸ்துவ மதம், முஸ்லீம் மதத்தில் இருந்து திப்பு சுல்தான் ஆகியோரை இழுத்து வைத்துக் கொண்டு, தன்னுடைய ஜாதி மதம் குறித்த அரசியல் நிலைப்பாட்டை நேரடியாக அழுத்தம் திருத்தமாக சொல்லாம வழக்கம்போல் உருட்டி வைத்துள்ளார். இதுதான் படத்தின் கதை.

சப் டைட்டில்: கதைதான் சொதப்பிவிட்டார், விஷுவலில் பரதேசி படத்தையும், ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் அப்படியே எடுத்து வைத்துள்ளார். ஒருபடம் ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது. ஆனால் ஒருபடம் புரியவே இல்லை என்றால் அது யாருடைய தவறு. வசனும் புரியல, கதையும் புரியலனு படம் பாக்கும்போது பலபேர் சொல்றாங்க. படத்துக்கு சப் டைட்டில் போட்டா நல்லா இருக்கும்னு சொல்றத கேட்டோம். இது ஒரு பிரீயட் படம். அதுக்கான வேலையும் சரியாகச் செய்யவில்லை. குடியிருப்பு பகுதி என ஒன்றைக் காட்டுகின்றார்கள் அதுவும் செயற்கையாக உள்ளது. அதேபோல் காஸ்டூமும் நன்றாக இல்லை. வி.எஃப்.எக்ஸ் வேலை சொல்லும் படியாக இல்லை. படத்தின் ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக படத்துடன் கனெக்ட்ர் செய்துகொள்ள முடியவில்லை.

பார்ட் 2: விக்ரம், பார்வதி, மாளவிகா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் படத்தை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். சரியில்லாத கதையும் வலுவில்லாத திரைக்கதையும் படத்தை ஜவ்வு மிட்டாய் போல மாத்திவிட்டது. படம் முடியும்போது பார்ட் 2க்கு லீட் கொடுத்து முடிக்கின்றார்கள். இது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

உண்மைக்கு நெருக்கமான படங்களைக் கொடுத்த ரஞ்சித் உண்மையான ரத்த சரித்திரம் குறித்து படம் எடுத்துள்ளார் என தங்கலானைப் பார்த்தால் தொங்கலான்னு தோனிடும்" என கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











