அடுத்தடுத்து மூன்று படம்.. பதம் குமார் ரீ எண்டரி.. கூட்டு சேரும் தீபன் பூபதி
சென்னை : அடுத்தடுத்து மூன்று படங்களில் அதிரடியாக களமிறங்க தயாராகும் பதம் குமார், தீபன் பூபதி கூட்டணி. ஆக்சன், திரில்லிங் என உருவாகம் இப்படங்கள், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.
போடா போடி தயாரிப்பாளர் பதம் குமார் கிட்டத்தட்ட 9 வருட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக மீண்டும் களம் இறக்குகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போடா போடி. இந்த படத்தை தயாரித்திருந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் பதம் குமார்.

ஏற்கனவே ஹிந்தியில் பல படங்களை இயக்கிய இவர் தற்போது மீண்டும் பட தயாரிப்பிலும் இயக்கத்திலும் இறங்க உள்ளார். இவருடன் இணைந்து புரியாத புதிர், ஆக்கோ படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதியும் இணைய உள்ளார். இணை தயாரிப்பாளராக கனடாவை சேர்ந்த நின்னா பைன்ஸ் என்பவர் பணியாற்ற உள்ளார்.
முதல் ப்ரொஜெக்டில் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழியிலும் பிரபலமான முக்கிய நடிகரும் அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகளும் நடிக்க உள்ளார்களாம். இதில் ஒரு புது முக நடிகையும் இரண்டு பிரபல நடிகையும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமணமான ஒரு நபரின் வாழ்க்கையில் முன்னாள் காதலியும் இன்னொரு பெண்ணும் நுழைய அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை ம்யூசிக்கல் திரில்லாக சொல்வது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தை பதம் குமரே இயக்க உள்ளாராம். இந்த படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய மும்பையைச் சேர்ந்த நரேந்தர் என்பவர் கலை இயக்குனராக பணியாற்ற உள்ளாராம்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகையை மையமாக வைத்து உருவாக உள்ள ஆக்சன் படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு விஸ்வரூபம் படத்திற்கு ஆக்சன் பணிகளை கவனித்த ஷேக்ஷா என்பவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர். இப்படத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடிக்கும் முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்திய அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மூன்றாவது படம் ஒரு நாயகன் மற்றும் இரண்டு நாயகிகளை கொண்ட ஆக்சன் திரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கனடாவில் இருந்து இந்தியா நடிக்க வரும் பெண்ணின் கதை தான் இப்படம்.
இந்த படங்களின் படபிடிப்பு இந்தியா, கனடா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடக்க உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் கனடாவின் தலைநகரமான ஒட்டாவா அரசின் மேயர் இப்படங்களை ப்ரொமோட் செய்ய உள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் படக்குழு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்ய கனடா செல்ல உள்ளனர். மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











